வியாழன், 15 நவம்பர், 2012

கெஜ்ரிவால் நன்கொடைக்கு கணக்கு காட்டவில்லை.

பிறர் குட்டை உடைக்கும் கெஜ்ரிவால் குட்டை உடைக்கப் போகும் டெல்லிக்காரர்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நடத்தும் என்.ஜி.ஓ. ஒன்றுக்கு கிடைத்த நன்கொடைப் பணத்திற்கு கணக்கு காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பிரனவ் அரோரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் பிரனவ் அரோரா. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்.
அவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கூறிய குற்றச்சாட்டு வருமாறு,
ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் மனிஷ் சிசோடியா நடத்தும் என்.ஜி.ஓ. கபிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு உள்ளது. அந்த என்.ஜி.ஓ.வுக்கு போர்டு பவுன்டேஷன் அளித்த நன்கொடை பணத்திற்குரிய கணக்கு காட்டப்படவில்லை. மேலும் கெஜ்ரிவால் நடத்தும் பப்ளிக் காஸ் ரிசர்ச் பவுன்டேஷன் என்னும் என்.ஜி.ஓ.வுக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை அவர் வெளியிட வேண்டும்.
கெஜ்ரிவால் பிறர் செய்த ஊழல்களை வெளிப்படுத்துவதற்கு முன்பு அவர் தனது என்.ஜி.ஓ.வுக்கு கிடைத்துள்ள நன்கொடை குறித்த சந்தேகங்களை முதலில் தீர்த்து வைக்க வேண்டும். நான் கெஜ்ரிவால் ஸ்டைலில் அவர் குற்றத்தை ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்துவேன். அதன் பிறகு அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

ஆனால் அரோராவின் குற்றச்சாட்டை ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
போர்டு பவுன்டேஷன் கடந்த 2005 மற்றும் 2008ல் கபிருக்கு நன்கொடை வழங்கியது. கடந்த 2010ல் 2 லட்சம் அமெரிக்க டாலர் கொடுக்க போர்டு பவுன்டேஷன் முன்வந்தபோது அதை வாங்க என்.ஜி.ஓ. கபிர் மறுத்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் உள்துறை அமைச்சகம் எங்கள் கணக்குகளை சரிபார்த்து ஆய்வு நடத்தியதில் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: