புதன், 14 நவம்பர், 2012

மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!

மகாராஷ்டிரா கரும்பு விவசாயிகள் மீது போலீசு தாக்குதல்!வினவு
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    மகாராஷ்டிரா கரும்பு விவசாயிகள் மீது போலீசு தாக்குதல்! – படம் நன்றி: தி இந்து
    ரும்புக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும் என்று மேற்கு மகாராஷ்டிராவில் போராடிய கரும்பு விவசாயிகள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ள‌னர்.
    விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஸ்வபிமான் ஷெட்காரி சங்கட்னாவின் தலைவர் ராஜூ ஷெட்டியை கைது செய்து விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது போலீஸ்.
    சாங்லி மாவட்டத்தில் போலீசார் சுட்டதில் சந்திரகாந்த் நலவாடே என்ற விவசாயி துப்பாக்கிக் குண்டு காயங்களினால் உயிரிழந்தார். கோலாப்பூரில் புந்தாலிக் கோகடே என்ற விவசாயி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.

    உற்பத்தி செலவை விடக் குறைவானதாகவே கரும்புக்கு அரசு விலை நிர்ணயிக்கிறது. ’9.5 சதவீதம் வரை சாறு கிடைத்தால் டன்னுக்கு ரூ 1750′ என்றும் ‘கூடுதலாக கிடைக்கும் ஒவ்வொரு 1 சதவீதம் சாறுக்கும் ரூ 179 என்றும் விலையை மகாராஷ்டிரா அரசு நிர்ணயித்துள்ளது. இதன் படி சராசரியாக ஒரு டன் கரும்புக்கு ரூ 2150 விலைதான் கிடைக்கும்.
    ‘ஒரு டன் கரும்புக்கு ரூ 4,500 விலை தர வேண்டும்’ என்றும் ‘முதல் தவணையாக உற்பத்தி செலவை ஈடு கட்ட ரூ 3,000 தர வேண்டும்’ என்றும் விவசாயிகள் கோருகிறார்கள். ஆலை முதலாளிகள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
    திங்கள் கிழமை மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார், மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சௌகான், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பட்டீல் ஆகியோர் மேற்கு மகாராஷ்டிராவில் இருந்து கொண்டே போராடும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை.
    மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சௌகான் ‘அரசு இதற்கு மேல் இந்த விஷயத்தில் தலையிடாது’ என்றும் ‘விவசாயிகளும் ஆலைகளும் தங்களுக்குள் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றும் பொறுப்பை கை கழுவியிருக்கிறார்.
    இதை ஒரு சாதிப் பிரச்சனையாக திரிக்கப் பார்க்கிறார் சரத்பவார். பாரமதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பவார், ‘மராத்தாக்களின் ஆலைகளுக்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். லிங்காயத் ஆலைகளில் போய் போராட வேண்டியதுதானே’ என்று திமிராக பேசியிருக்கிறார்.
    கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜூ ஷெட்டி 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர சட்டசபை உறுப்பினராகவும், 2009-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பிறகும் அவர் யாருக்காக போராடுவதாகச் சொல்கிறாரோ அதே விவசாயிகள் குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
    மகாராஷ்டிரா மாநிலத்தின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார், அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவற்றின் மூலம் கொள்ளை அடிக்கும் பணத்தை அரசியலுக்கும், சர்க்கரை தொழிலில் தமக்கு ஆதாயம் தரும் கொள்கைகளை உருவாக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றனர் இந்தப் பாதகர்கள்.
    ‘தமது நலன்களை பாதுகாக்க போராட்டமே வழி’ என்று உணர்ந்த கரும்பு விவசாயிகளின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு 12 நாட்கள் கடும் போராட்டங்களுக்குப் பிறகு மாநில அரசு தலையிட்டு முந்தைய ஆண்டு நிர்ணயித்த விலையான ரூ 1,400ஐ விட அதிகமாக முதல் தவணையாக ரூ 1,800 கிடைக்கும் படி செய்தது.
    தமது அரசியல் செல்வாக்கை வைத்து குறைந்த விலைக்கு கரும்பை வாங்கி விவசாயிகளைச் சுரண்டுவது, பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பது என்று அடாவடி செய்கின்றனர் முதலாளிகள். சென்ற ஆண்டு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையை பல ஆலைகள் விவசாயிகளுக்கு தரவில்லை. மகாராஷ்டிர சர்க்கரை ஆலைகளின் ஆணையர் விஜய் குமார் சிங்கல், ‘சென்ற பருவத்தில் கரும்பு அரவையில் ஈடுபட்ட 170 ஆலைகளில் 28 ஆலைகள் இன்னமும் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை’ என்றும், ‘அந்த ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்றும் தெரிவிக்கிறார்.
    கரும்பைப் பிழிந்து சாறு எடுத்து அடுத்தடுத்த நிலைகளில் இயந்திரங்களில் செலுத்தி சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அதனால் சர்க்கரை ஆலையின் செலவுகளை கணக்கிடுவதில் பல நெளிவு சுளிவுகள் இருக்கின்றன. முகேஷ் அம்பானி கிருஷ்ணா கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுப்பதற்கான முதலீட்டு செலவை ஏற்றிச் சொல்வது போல ஒவ்வொரு கட்டத்திலும் இயந்திரங்கள் வாங்குவது, ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுப்பது, உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுப்பது என்று செலவுகளை உயர்த்திக் காட்டி சுரண்டும் வாய்ப்புகள் இதில் ஏராளம் இருக்கின்றன.
    இலாப வேட்டைக்காக ஆலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் பல்வேறு வழிகளில் தமது பைகளை நிரப்பிக் கொண்டு, ஒரு பக்கம் கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலையை மறுப்பதோடு மறுபக்கம் பயன்படுத்தும் மக்களுக்கு சர்க்கரை விலையை ஏற்றியும் கொள்ளை அடிக்கிறார்கள்.
    ஆலைகளை விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களின் பொறுப்பில் ஒப்படைத்து, சர்க்கரையை அரசே நுகர்வோருக்கு விநியோகிப்பதுதான் தற்போதைய‌ தீர்வாக இருக்க முடியும். இப்போது நிலவும் முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரிகள் கூட்டுக் கொள்ளை அமைப்பில் அத்தகைய நியாயமான தீர்வுகள் சாத்தியமில்லை என்பதுதான் நிஜம்.

    கருத்துகள் இல்லை: