ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ECR சென்னை ஈசிஆர்... திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச் சாலை அமைக்க அரசு முடிவு

murugan P   - tamil.oneindia.com  :  சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச் சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது முதல் கட்ட நிலம் எடுப்பு பணிக்காக 778 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க இறுதிக்கட்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 

சென்னை திருவான்மியூரில் இருந்து தொடங்குகிறது கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்). இந்த சாலை சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமார் 135 கி.மீ தூரம் நீள்கிறது. சென்னையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை பல ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளன. சென்னையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் உற்காகமாக பொழுதை கழிக்க கிழக்கு கடற்கரை சாலைக்கு பல்லாயிரம் பேர் சென்றுவருவார்கள். இது தவிர மாமல்லபுரத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவுக்காக ஈசிஆர் சாலையில் தான் வந்து செல்கின்றனர். பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்ல இந்த சாலை தான் பிரதானமாக பயன்படுத்தபப்டுகிறது. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் செல்கின்றன.

அரசு முடிவு இதனால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்ற 2012ல் அரசு முடிவு செய்தது. பணிகளை பல இடங்களில் முடித்த அரசால, திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் உள்ள சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கலை சந்தித்தது. ஏனெனில் திருவான்மியூர் முதல் பாலவாக்கம் வரை சாலைகளில் இரு புறங்களும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்ததால் சாலையை அகலப்பபடுத்த முடியவில்லை.


கோர்ட் வரை சென்றனர் அந்த கடைகள் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தடை கோரி கோர்டுக்கு சென்றனர். இதனால், அந்த கடைகளை அகற்றுவதில் சிக்கல் ஏ அதிகரித்தது. இதன் காரணமாக, திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையை கடக்க நீண்ட நேரம் ஆனது. காலை மற்றும் மாலையில் ஆமை வேகத்தில் செல்லும் அளவுக்கு வாகன பெருக்கம் அதிகமாக இருந்தது. அடிக்கடி விபத்தும் ஏறபட்டது. இதனால் திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச்சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


கிழக்கு கடற்கரை சாலை முதற்கட்டமாக நில எடுப்பு பணிக்கு ரூ.778 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது அரசு.. 100 அடி வரை நீளத்தில் ஆறுவழி பாதை அமைய உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் 50 முதல் 80 அடி வரை இடம் எடுக்கப்பட உள்ளது. 30.5 மீட்டரில், சாலை அகலமாக அமைக்கப்பட உள்ளதால் தேவையான இடத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், வீடுகளுக்கு நெடுஞ்சாலைத்துறை இறுதிகட்ட நோட்டீஸ் அனுப்பினர்

நெடுஞ்சாலைத்துறை முடிவு இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை வழங்கிய கால அவகாசம் முடிந்த பின்னரும் காலி செய்யாத கடை, வீடு, வணிக வளாகங்களை நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்க முடிவு செய்துள்ளனர். தற்போதைய நிலையில் பலர் நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான இடங்களில் கட்டிடங்களை மட்டும் இடித்து அகற்றி வருகிறார்கள். முற்றிலும் ஆக்கிரிமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த ஆறுவழிசாலை அமைந்த்ல் இனி ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறை வாய்ப்பு உள்ளது.இதனிடையே சாலையோரம் கடை வைத்திருந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அவர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஏற்கனவே அரசு தாம்பரம் செங்கல்பட்டு சாலையை 8 வழிச்சாலை ஆக்க முடிவு செய்துள்ள நிலையில், இப்போது ஈசிஆர் சாலையும் ஆறுவழிச்சாலையாகிறது.

கருத்துகள் இல்லை: