புதன், 21 அக்டோபர், 2020

பஞ்சாப் சவால் ! வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றம்

dailythanthi.com : மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. சண்டிகார், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்களும், தீர்மானமும் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சந்தித்து முதல்-மந்திரி அமரீந்தர் சிங் வலியுறுத்தினார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கடந்த மாதம் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அம்மசோதாக்கள் சட்டவடிவம் பெற்றுள்ளன. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், சில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களை முறியடிக்க மாநில சட்டசபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் முதல்-மந்திரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதை ஏற்று, பஞ்சாப்சட்டசபையில் 4 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-மந்திரி அமரீந்தர் சிங் நேற்று தாக்கல் செய்தார்.

மேலும், அந்த வேளாண் சட்டங்களை முறியடிக்க 4 மசோதாக்களையும் அவர் தாக்கல் செய்தார்.

பின்னர், சட்டசபையில் பேசிய அமரீந்தர் சிங், “வேளாண் சட்டங்களால் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த மசோதாக்களை தாக்கல் செய்துள்ளோம்.

பஞ்சாப் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பணிந்து போவதை விட நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். எனது ஆட்சி கலைக்கப்படுவதை சந்திக்கவும் தயார். இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நிலைமை கைமீறி போய்விடும். ஆத்திரம் அடைந்துள்ள இளைஞர்கள், தெருவுக்கு வந்து விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

இதே நிலைமை நீடித்தால், அமைதியான சூழ்நிலைசீர்குலையக்கூடும். 80 மற்றும் 90-களில் அப்படித்தான் நடந்தது. அமைதி சீர்குலைவை சீனாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். எனவே, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். வேறு வழியின்றி தங்களை காத்துக்கொள்ள போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை கைவிட்டு, அவர்கள் மாநில அரசுக்கு உதவ வேண்டும்.

தற்போது, வேறு மாநிலங்களும் நாட்டுக்கு உணவு தானியங்களை அளிக்கத் தொடங்கி விட்டன. எனவே, பஞ்சாப் விவசாயிகளை பிரதமர் புறக்கணிக்கிறார்” என்று அவர் பேசினார்.

5 மணி நேர விவாதத்துக்கு பிறகு, 4 மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அகாலி தளம், ஆம் ஆத்மி, லோக் இன்சாப் ஆகிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன. பா.ஜனதா, இந்த கூட்டத்தொடரை புறக்கணித்தது.

அதையடுத்து, காங்கிரஸ், அகாலி தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் வி.பி.சிங் பட்னோரை முதல்-மந்திரி அமரீந்தர் சிங் சந்தித்தார். நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் தீர்மானத்தின் நகலை கவர்னரிடம் வழங்கினார். மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்

கருத்துகள் இல்லை: