வெள்ளி, 23 அக்டோபர், 2020

டொனால்டு டிரம்ப் : இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது

  BBC : இன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது என தெரிவித்துள்ளார். 

அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில் வியாழனன்று மாலை இந்த விவாதம் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து பருவ நிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது வரை என அனைத்தும் விவாதிக்கப்பட்டது. 

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினாலும், முந்தைய விவாதத்தைக்காட்டிலும் ஓரளவு அமைதியான விவாதமாக இது அமைந்தது என்றே கூறலாம். `இந்தியா அசுத்தமாகவுள்ளது` விவாதத்தின் நடுவரான க்ரிஸ்டன் வெல்கர் டிரம்பிடம் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு கையாளுவீர்கள் அதே சமயத்தில் வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெருக்குவீர்கள் என்று கேட்டார். 

அதற்கு பதிலளித்த டிரம்ப், "கடந்த 35 வருடங்களில் அமெரிக்கா வெளியிடும் கார்பன் எண்ணிக்கை சரியானதாக உள்ளது. சீனாவை பாருங்கள் அவ்வளவு அசுத்தமாக உள்ளது, ரஷ்யாவை பாருங்கள் எவ்வளவு அசுத்தமாக உள்ளது. இந்தியாவை பாருங்கள், அசுத்தமாக உள்ளது; அதன் காற்று அசுத்தமாக உள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தால் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை, நிறுவனங்களையும் நான் இழக்க விரும்பவில்லை. இது மிகவும் நியாயமற்றது." என தெரிவித்தார். 

"நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை மீட்க வேண்டியிருந்ததால், நான் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினேன். நாம் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோம்" என்று ஜோ பைடனுக்கு எதிரான விவாதத்தின்போது டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

கருத்துகள் இல்லை: