சனி, 24 அக்டோபர், 2020

1991-இல் ராஜீவ் படுகொலை.. 1992-இல் பாபர் மசூதி இடிப்பு.... இரண்டிலும் அதிகமாக அரசியல் அறுவடைகள் செய்தவர்கள் யார் ?

Narain Rajagopalan : · ஒரு அரசியல் கொலை நிகழ்த்தப் படுவதற்கான காரணம் இரண்டே இரண்டு தான் 1 ) தங்களுக்கு தடையாக இருக்கும் ஒரு ஆளுமையை முழுமையாக அகற்றுவது. அதன் மூலம் அந்த ஆளுமை சார்ந்த கட்சி / இயக்கத்தினை குழப்பி அதில் கரையேறுவது 2 ) ஒரு அரசியல் ஆளுமையை நீக்குவதன் மூலம் தங்களுடைய வலிமையை பறைசாற்றி, வெற்றிடத்தினை உருவாக்குவது
தெளிவான காரணங்களும், அரசியல் இலாபங்களும் இல்லாமல் உலகில் எந்த அரசியல் படுகொலைகளும் நிகழ்த்தப் படுவதில்லை. ராஜீவின் கொலை அத்தகையது. அதில் இலாபம் பார்த்தவர்கள் யார் என்பது தான் முக்கியமான கேள்வி.
1991 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் இரண்டு இடைநிலை அரசாங்கங்கள் இருந்தன. வி.பி.சிங் பாஜகவின் வெளி ஆதரவோடு நடத்திய ஆட்சி. அதற்கு பின்பு சந்திரசேகர் காங்கிரசு ஆதரவோடு நடத்திய ஆட்சி (தேர்தல் நடக்கும் போது சந்திரசேகரின் அரசு தான் காபந்து அரசாங்கம்)
ராஜீவ் மக்களோடு மக்களாக கலந்து கூட்டங்களில் பங்கு பெறுவதை பார்க்கும் யாசர் அராபத் ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கிறார். யாசர் அராபத் இலங்கை இனப் பிரச்சனையில் புலிகளுக்கு ஆதரவாக நின்றவர் என்பதும், 1997ல் சமரச பேச்சுவார்த்தையை தானே முன்னின்று நடத்த முன்வந்தவர் என்பதும் இங்கே முக்கியமானது.
மார்ச் 1991-இல் அப்போது தி இண்டூவில் உயர்பணியில் இருந்த மாலினி பார்த்தசாரதியும், காசி அனந்தனும், மறவன் புலவு சச்சிதானந்தனும் ராஜீவ் காந்தியை சந்திக்கிறார்கள். ராஜீவ் “I am misguided" என்று சொன்னதாக மூவருமே வெவ்வேறு காலங்களில் பதிகிறார்கள்.
நரசிம்மராவின் மைனாரிட்டி ஆட்சியில் தான் (1991 - 96) சந்திரா சுவாமி என்கிற ஒரு சாமியாரின் பெயர் எல்லா இடங்களிலும் அடிபடுகிறது. சந்திரா சுவாமி தான் நரசிம்மராவிற்கு “ராஜ குருவாக” இருந்தவர். ராஜீவ் படுகொலை பற்றிய ஜெயின் கமிஷன் அறிக்கையில் சந்திரா சுவாமியின் பங்கு இருந்தது என்று எழுதப்பட்டு இருந்தது. சந்திரா சுவாமி தன்னை ஒரு தந்திரிக் என்று சொல்லி கொண்டு ஹிந்துத்துவ இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ஹிந்து சாமியார்கள் அதற்கு முன்பும் கூட அரசியல் தலைவர்களோடு தொடர்புடையவர்கள் தான், ஆனால் ஒரு போதும் பட்டவர்த்தனமாக தங்களை முன்னிறுத்தி கொண்டு அரசியல் பேசியதே இல்லை. சந்திரா சுவாமி தான் இந்திய அரசியலில் அதை ஆரம்பித்து வைக்கிறார்.
இப்போது கேள்விகள்.
மார்ச் மாதம் மாலினி பார்த்தசாரதியிடம் வாக்கு கொடுக்கும் ராஜீவினை, மே மாதம் புலிகள் கொல்வார்களா ?
புலிகளின் ஆதரவாளரான யாசர் அராபத்தே ”புலிகளின் திட்டம் தெரிந்தே” ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன ?
இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகு, ஒரு செக்குலர் பார்வையினையும், நவீனத்தையும் முன்னெடுத்த ராஜீவ் காந்தியின் வளர்ச்சி என்பது “யாருடைய கொள்கைகளுக்கு” தடைக்கல்லாக இருந்திருக்க கூடும் ?
1987-இல் இந்திய அமைதிப்படை இலங்கை போகிறது. 1989ல் ஆரம்பித்து 1990ல் மொத்தமாக திரும்பி விடுகிறார்கள். 1991-இல் I am misguided என்கிறார் ராஜீவ். அப்போது ராஜீவினை கொல்வதால் புலிகளுக்கு இலாபமே இல்லை. அப்படி என்றால் அவரை கொன்றால், யாருக்கு இலாபம் அன்றைக்கு அதிகமாக இருந்தது ?
1991-இல் படுகொலை நடக்கிறது. 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. இந்த இரண்டிலும் அதிகமாக அரசியல் அறுவடைகள் செய்தவர்கள் யார் ?
பவுத்த மதவாதம் தான் இலங்கை சிக்கலுக்கான அடிப்படை. ஹிந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ், அதன் அரசியல் முகமான பாஜக, இவை மூன்றுக்குமே அடிப்படை ஹிந்து மதவாத அடிப்படை தான். All the religious fundmentalists of the world Unite என்பதா ?
1984-இல் 2 தொகுதிகள். 1989 தேர்தலில் 85 தொகுதிகள். 1991 தேர்தலில் 120 தொகுதிகள் என பா.ஜ.க வெல்கிறது. அடுத்த எட்டாண்டுகளில் முதல் முழுமையான பாஜக அரசு 1999-இல் அமைகிறது. இது தற்செயலா, அரசியல் மாற்றமா (அ) திட்டமிடலா ?
திரும்பவும் மேலே போய் ஒரு அரசியல் படுகொலைக்கான இரண்டு காரணங்களை படியுங்கள். திரும்பவும் கேள்விகளை படியுங்கள். விடை தெரிந்தால் அமைதியாக கடந்து போங்கள்.
சில கறைகளையும், அவமானங்களையும் வரலாற்றை மீட்டெடுக்கும் போது தான் களையவே முடியும்.

கருத்துகள் இல்லை: