புதன், 21 அக்டோபர், 2020

அதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்

minnambalam : 7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2017ஆம் ஆண்டில் நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவது மிகவும் குறைந்தது. இதனால், நீதிபதி கலையரசன் குழு அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தும் எழுவர் விடுதலை பரிந்துரையைப் போலவே 7.5 சதவிகித சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மருத்துவக் கலந்தாய்வை நடத்தப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இன்று (அக்டோபர் 21) கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவை நீட் தேர்வு தடை செய்வதால், அதனை ரத்துசெய்ய வேண்டுமென திமுக கோரி வருவது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்

நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி கலையரசன் குழு தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகள் படிக்க முன்னுரிமை வழங்குவதன் மூலம், தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சம உரிமை கிடைக்க வழிவகை செய்ய முடியும். ஆகவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான மசோதா 15.09.2019 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது” என சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நடப்பு ஆண்டிலேயே 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பயனடைய தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்திற்கு தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,

“சட்டமன்றத்தில் இந்த மசோதாவை பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் ஆதரித்துள்ளது. ஆகவே, உடனடியாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேற உதவி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டாலின், “மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முதல்வர் முன்வர வேண்டும்” என்று கோரிக்கையை வைத்துள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை: