செவ்வாய், 20 அக்டோபர், 2020

விஜய் சேதுபதி 800 இல் நடிப்பார் ? 23-11-2020 அன்று படப்பிடிப்பு ஆரம்பம்?

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தங்களின்

கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  இந்நிலையில், தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிட கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை கேட்டுகொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 அவரது முழு அறிக்கையில், “என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ '800' படத்திலிருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதிக்கு சிலர்‌ தரப்பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌. எனவே என்னால்‌ தமிழ்‌நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌ கலைப் பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ எற்பட்டுவிடக்கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்‌.  

 ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்கால தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்‌, அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டுள்ளன.

 நிச்சயமாக இந்த தடைகளையும்‌ கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌, அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

 இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும்,‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்,‌ தமிழ்‌த் திரைப்படக் கலைஞர்களுக்கும்,‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்,‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஜய் சேதுபதி,  “நன்றி.. வணக்கம்” என பதில் ட்வீட் செய்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த ட்வீட் குறித்து சிலர், இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என முடிவு செய்துவிட்டார் என்று கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர், நன்றி வணக்கத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் முத்தையா முரளிதரனின் வேண்டுகோளுக்கு நன்றி வணக்கம் சொன்னாரா? படத்தில் நடிக்க மாட்டேன் என எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை என பெரும் விவாதம் சமூக வலைதளத்தில் எழுந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: