வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எல்லா வகை கொரோனாவையும் தடுத்து நிறுத்தும் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

எல்லா வகை கொரோனாவையும் தடுத்து நிறுத்தும் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கொரோனா வைரஸ்


இந்த தருணத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை போன்றே பிரபலமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் புதிதாக ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளது.

இந்த தடுப்பூசிக்கு ‘டியோஸ்-கோவேக்ஸ் 2’ என பெயரிப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் சிறப்புத்தன்மை, இது எல்லாவிதமான கொரோனா வைரசையும் தடுத்து நிறுத்தும். அது மட்டுமின்றி, வவ்வால்கள் உள்ளிட்ட பிராணிகளிடம் இருந்து எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸ்களையும் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இன்னுமொரு சிறப்பு, பொதுவாக தடுப்பூசி என்றால் ஊசி வழியாக உடலில் செலுத்தப்படும். இந்த தடுப்பூசியை ஊசியில்லாமல், வலி இல்லாமல் ‘ஸ்பிரிங்’ சக்தி கொண்டு உடலுக்குள் செலுத்த முடியும் என்பதுதான்.

இதுபற்றி இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜோனத்தான் ஹீனி, அதன் நோக்கம் பற்றி இப்படி கூறுகிறார்:-

“எங்கள் அணுகுமுறை, கொரோனா வைரஸ் கட்டமைப்பில் 3 டி கணினி மாடலிங்குடன் ஆனது ஆகும். இது கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களையும், அதன் உறவினர்களையும் பயன்படுத்துகிறது.

விலங்குகளால் பரப்பப்படுகிற சார்ஸ், மெர்ஸ் மற்றும் பிற கொரோனா வைரஸ்கள் எதிர்காலத்திலும் மனிதர்களுக்கு தொற்றுநோயாக பரவும் வாய்ப்பு உள்ளது.

நாங்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் எதிர்ப்பு மறுமொழியை சரியான திசையில் செலுத்துவதற்கு தடுப்பூசியை தேடுகிறோம்.

இறுதியில், நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து (சார்ஸ் கோவ்-2) மட்டுமல்லாமல், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய பிற தொடர்புடைய கொரோனா வைரஸ்களிடம் இருந்தும் ஒரு தடுப்பூசி தயாரிப்பதை நோக்கமாக கொண்டு இருக்கிறோம்”,

இப்படி தடுப்பூசியின் நோக்கத்தை விளக்குகிறார் பேராசிரியர் ஜோனத்தான் ஹீனி.

இந்த திட்டத்தின் மற்றொரு விஞ்ஞானியான டாக்டர் ரெபேக்கா கின்ஸ்லி சொல்கிறார்-

“பெரும்பாலான ஆராய்ச்சி குழுக்கள் தொற்று நோயை சமாளிப்பதற்கு, அவசர தேவை என்பதால், தடுப்பூசி வளர்ச்சிக்கென்று ஏற்கனவே உருவாக்கப்பட்ட அணுகுமுறைகளை பயன்படுத்தி உள்ளன. தற்போதைய மருத்துவ பரிசோதனைகள், நேர்மறைவான விளைவுகளை கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

ஆனால் வெற்றிகரமான தடுப்பூசிகள்கூட ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டுள்ளன. அவை பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு (வயதானவர்களுக்கு, நாள்பட்ட நோய்களை கொண்டவர்களுக்கு) பொருந்தாமல் போகலாம். இந்த தடுப்பூசியின் விளைவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எங்களுக்கு தெரியாது.

எங்கள் அணுகுமுறை, அதாவது செயற்கை டி.என்.ஏ.யை பயன்படுத்தி, நோய்த்தடுப்பு ஆன்டிஜன்களை வழங்கும் தடுப்பூசி, புரட்சிகரமான ஒன்றாக இருக்கும். கொரோனா வைரஸ் போன்ற சிக்கலான வைரஸ்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். இது வெற்றிகரமாக அமைந்தால், பரந்த அளவிலான பயன்பாட்டுக்கு, பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இதை குறைந்த செலவில் தயாரித்து, வினியோக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறுகிறார்.

இந்த ‘டியோஸ்-கோவேக்ஸ் 2’ தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனையை இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கும்.

இந்த தடுப்பூசி திட்டத்துக்கு இங்கிலாந்து அரசு 1.9 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.18.62 கோடி) நிதி உதவி வழங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை: