புதன், 26 ஆகஸ்ட், 2020

ஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தை நாடிய வேதாந்தா!

    minnamblam: ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது ஆலை நிர்வாகம்.   தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு சீல் வைத்தது.இந்நிலையில் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி ஆலை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 26) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, தங்கள் தரப்பைக் கேட்காமல் முடிவை மாற்றக்கூடாது என எதிர்தரப்பான மக்கள் அதிகாரம் அமைப்பு, மதிமுக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழில்

கருத்துகள் இல்லை: