திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காங்., கட்சிக்குள் பூகம்பம்: தலைவராக சோனியாவே தொடர முடிவு

 தினமலர் :  புதுடில்லி: டில்லியில் இன்று 7 மணி நேரம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இடைக்கால சோனியா நீடிப்பார் எனவும், அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடிதம் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று ஓராண்டை கடந்து விட்ட நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும் திறமையுள்ள தலைமை தேவை என ஒரு பிரிவினர் கடிதம் எழுதினர்

விலக தயார்.....இந்நிலையில், இன்று டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளின் கடிதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து சோனியா அனுப்பிய கடிதத்தை, காங்., மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் வாசித்தார். அதில், தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்யும்படியும் சோனியா குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்திற்கு மன்மோகன் சிங் மற்றும் ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

ராகுல் கண்டனம்

சோனியாவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக காங்.,மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்ட நிலையிலும், ராஜஸ்தானில் ஆட்சி சிக்கல் இருந்த நிலையில் கடிதம் எழுதப்பட்டது ஏன்? பா.ஜ., உடன் உள்ள தொடர்பு காரணமாக இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. கட்சி தொடர்புடைய பிரச்னையை வெளியில் சொன்னது தவறு. அதனை செயற்குழுவில் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பதில்

இதற்கு பதிலளித்த குலாம் நபி ஆசாத், பா.ஜ., உடன் உள்ள தொடர்பை நிரூபித்தால் கட்சியில் இருந்து விலக தயார். கட்சி நடவடிக்கை எடுத்தால், அதனை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக கபில் சிபல் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பா.ஜ.,உடன் நாங்கள் தொடர்பில் இருந்ததாக ராகல் கூறினார். காங்கிரசுக்காக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றோம். மணிப்பூரில் பாஜ., ஆட்சியை வீழ்த்த கட்சிக்காக வாதாடினோம். 30 ஆண்டுகளில், பா.ஜ.,விற்கு ஆதரவாக ஒரு கருத்தை கூட தெரிவித்தது இல்லை என பதிவிட்டிருந்தார்.

இதன் பின்னர் சில நிமிடங்களில், அந்த பதிவை நீக்கிய கபில் சிபல், ராகுல் டுவிட்டரில் தனிப்பட்ட முறையில், என்னிடம் பேசினார். என்னை பற்றி எதுவும் கூறிவில்லைஎன்றார். இதனால், முந்தைய டுவிட்டை திரும்ப பெற்று கொள்கிறேன் என தெரிவித்தார்.

புதிய தலைவர்  


காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சுமார் 7 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில், காங்கிரசின் இடைக்கால தலைவராக சோனியாவே தொடர்வார் எனவும், அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: