திங்கள், 24 ஆகஸ்ட், 2020

"பா.ஜ.க.வுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு" -ராகுல்காந்தி குற்றச்சாட்டு?

CONGRESS PARTY MEETING RAHUL GANDHI SPEECHnakkheeran.in - nakkheeran :அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று (24/08/2020) காணொளி காட்சி மூலம் தொடங்கியது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி.செல்லக்குமார் காணொளி மூலம் கலந்து கொண்டார். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ள நிலையில், சோனியா காந்தியே தொடர வேண்டும் என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். 

 இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.   


இந்நிலையில் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'பா.ஜ.க.வுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். சோனியாவுக்கு எதிராகக் கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர்கள். ராஜஸ்தான் ஆட்சி விவகாரம், மருத்துவமனையில் சோனியா இருந்தபோது கடிதம் எழுதலாமா? என்று கேள்வி எழுப்பிய ராகுல், தலைமையில் மாற்றம் தேவை எனக் கடிதம் எழுதியவர்கள் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது. தலைமை மாற்றம் என்பது காரிய கமிட்டியில் விவாதிக்க வேண்டியது; ஊடகத்தில் அல்ல' என்று ராகுல் பேசியதாகக் கூறப்படுகிறது.      

CONGRESS PARTY MEETING RAHUL GANDHI SPEECH

 

ராகுல்காந்தியின் கருத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.    

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல், "கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி கண்டோம்" என்று பதிவிட்டுள்ளார். "பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்திருப்பதாக நிரூபித்தால் பதவி விலக தயார்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

  இதனிடையே ராகுல்காந்தி மீதான தனது குற்றச்சட்டை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் திரும்பப் பெற்றார். ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் தன்னை அழைத்து விளக்கம் அளித்ததால் கருத்தைத் திரும்பப் பெறுகிறேன். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.வு.டன் தொடர்புடையவர்கள் என தான் கூறவில்லை என ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளதாக கபில்சிபல் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுடன் தொடர்பு என ராகுல் பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுர்ஜிவாலாவும் மறுப்பு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: