புதன், 26 ஆகஸ்ட், 2020

உனது உடலைவிட உனக்கு வேறு பெரிய சொத்து கிடையாது.

 

இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும்.  இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது.
எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் உடலை தாங்களே மிகவும் பாரதூரமாக சிதைக்கின்றனர்.
மனித உடலின் பெறுமதியை மிகவும் மலினப்படுத்திய முதல் குற்றவாளிகள்  மதவாதிகள்தான்.
மதங்கள் உருவாக்கிய காலச்சாரம் பாரம்பரியம் போன்றவை எல்லாம்  மனித உடலுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை.  உடலை விட ஆத்மா உயர்ந்தது அல்லது அந்த ஆத்மாவை விட கடவுள் பெரியது என்பதாகதான் எல்லா மதங்களும் மீண்டும்  மீண்டும் பிரசாரம் செய்கின்றன
இந்த மதங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான பிரசாரங்களால் மனிதமனத்தின் மிகவும் ஆழத்தில் தனது உடல் ஒரு பெறுமதி இல்லாத பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டது.
மனிதர்களை நல்வழிக்கு அழைத்து செல்வதாக கூறிகொள்ளும் மதங்கள் இறுதியில் மனிதனின் உடலை வெறும் வழி தேங்காயை எடுத்து தெருவில் உடைப்பது போன்று மனிதர்களின் உடல் பற்றிய கரிசனையை குழி  தோண்டி புதைத்து விட்டன.
உலகில் உள்ள எந்த விலை உயர்ந்த அதி பெறுமதி வாய்ந்த சிலையையும் விட மனிதனின் உடல் அற்புதமான உயிருள்ள சிலையாகும்..
இறைவனை வணங்குவதை விட தமது உடலை முதலில் வணங்குவதே மிகவும் சரியான ஒரு வழிபாடாக இருக்கமுடியும். அதற்கு அடுத்ததுதான் மீது வழிபாடெல்லாம். உடல் இருந்தால்தானே உன்னால் மீதி வழிபாடெல்லாம் தொடர முடியும் !

உடலை வருத்துவதை இறைவன் விரும்புகிறான் என்ற கோட்பாட்டை எல்லா மதங்களும் அடிக்கடி பிரசாரம் செய்தே வந்திருக்கின்றன.
துலா காவடி தூக்குவதுவும் , இஸ்லாமியர்கள் தங்கள் முதுகில் தாங்களே கத்திகளால் வெட்டி கொள்வதுவும் , கிருஸ்தவர்கள் இல்லறவாழ்வை துறந்து இறைவனுக்காக நாட்களை ஓட்டுவதுவும் உடலின் மகிமையை கேவலப்படுத்துவதாகும்.
மனிதர்கள் தங்கள் உடலை அலட்சியப்படுத்திய காரணத்தால் பெரிதும் நல்வாழ்வை இழந்து விட்டனர்.
உடலை நீ மதிக்காவிட்டால் உடல் உன்னை மதிக்காது உனக்கு வாழ்வை தாராது.
உலகில் தோன்றிய மதங்கள் பெரிதும் ஆண்களாலேயே நிறுவப்பட்டதாகும். இந்த ஆண்களின் மதங்கள் எல்லாம் பெண்களின் மனதில் தங்கள் உடலை பற்றிய தாழ்வு மனப்பான்மையை மிகவும் அழுத்தமாக பதித்து விட்டன.  உயிர்களை உருவாக்கும் அற்புத இயங்கியலையே மிகவும் கேவலமானதாக சித்தரித்து விட்டனர்.

இன்றும் கூட பல சமயங்களில் பெண்களின் பங்களிப்பு மிகவும் விலக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோட்பாடுகளை உடைத்து  எறியும் துணிவும் அறியும் எல்லோருக்கும் வரவேண்டும்.
உடலின் அற்புதங்களிலேயே மிகவும் உயர்ந்தது ஒரு புதிய உயிரும் உடலும் உருவாவதுதான்.
அந்த அற்புத Process க்கு  உரிய மதிப்பை மனிதர்கள் வழங்குதை தடுப்பது எது?

இந்த உடல் தந்த வாழ்வை நீ மகிழ்வோடு போற்றாது விட்டால் உலக வாழ்வு உனக்கு இனிக்காது.
உடலைவிட வேறு ஏதோ ஒன்றுதான் உயர்ந்தது என்று நீ எண்ணினால் உன் வாழ்வின் அத்திவாரத்தையே நீ எள்ளி நகையாடுகின்றாய் என்றுதான் அர்த்தம்.
உடலை போற்று .. உடலை  பேணு ... உடலை அழகுபடுத்து !
அதுதான் உனக்கு இறுதிவரை உன்னோடு இருக்கும்.
உன் விருப்பங்களை எல்லாம் ஈடேற்ற உறுதுணையாக இருக்கும்.
இறைவன் பெயராலோ வேறு எதனின் பெயராலோ உன் உடலை கேவலப்படுத்துவதை இன்றோடு விட்டு விடு .
இன்றில் இருந்து உனக்கு நல்லதே நடக்கும் !  Radha Manohar.

கருத்துகள் இல்லை: