வெள்ளி, 6 டிசம்பர், 2019

ஸ்டாலின் முன்னிலையில் முதல்வர் எடப்பாடியின் தம்பி திமுகவில் இணைந்தார்:

தினகரன் :  சென்னை: முதல்வர் எடப்பாடியின் தம்பி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி நெடுங்குளத்தை சேர்ந்தவரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்காளியுமான பி.விசுவநாதன் மற்றும் அவரது மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோர் நேற்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் திருச்செங்கோடு எம்.கந்தசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் முருகேசன், எடப்பாடி ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த விசுவநாதன் அளித்த பேட்டியில், “அதிமுகவில் சுதந்திரம் என்பதே கிடையாது. அவர்கள் கட்டுப்பாட்டில்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்கள் விரோத போக்கு ரொம்ப அதிகமாக உள்ளது. சுதந்திரமாக எதிலும் செயல்பட முடியவில்லை. சுதந்திரமாக செயல்பட கூடிய ஒரே கட்சி திமுகதான். மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாட்டால் திமுகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

கருத்துகள் இல்லை: