திங்கள், 2 டிசம்பர், 2019

துரோகிகள் விரைவில் சிறைக்குச் சென்றுவிடுவார்கள். .. சசிகலா தினகரனிடம் கூறியது .. பார்ப்பன அக்கிரஹாரா ..

தினகரனிடம் சசிகலா சொன்ன செய்தி!மின்னம்பலம் : சிறையில் தன்னை சந்தித்த தினகரனிடம் முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் சசிகலாவின் நண்பர்களும் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசி வருகின்றனர். இதனிடையே சசிகலாவைச் சட்ட ரீதியாக வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். வரும் பிப்ரவரி மாதம் அவர் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார் என்று அமமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவை ஆதரிப்பார் என்றும் பேசப்பட்டது. ஆனால், இதற்கு பொதுக் குழு கூட்டத்தில் மறைமுகமாகப் பதிலளித்த கே.பி.முனுசாமி, ‘யாரையும் நாங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்’ எனத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தத் தகவலை தினகரனும் தொடர்ந்து மறுத்துவருகிறார்.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ பெருமாள், வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் வந்தனர். இதைத் தொடர்ந்து நடராஜனின் தம்பி பழனிவேல், குடும்ப புரோகிதர் தேவதி, சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், அரூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகன், தருமபுரி மாவட்ட அமமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும், இறுதியாக அமமுக பொதுச் செயலாளர் தினகரனும் சென்றனர். 12.40 மணிக்கு வழக்கறிஞர் அசோகன் தவிர அனைவரும் உள்ளே சென்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து 12.50 மணிக்கு இளவரசி மகனும், ஜெயா டிவி சிஇஓவுமான விவேக், அவரது சகோதரி ஷகிலா, ராஜராஜன் ஆகியோருடன் வழக்கறிஞர் அசோகனும் உள்ளே சென்றார். அந்த நேரத்தில் முருகன் மற்றும் டி.கே. ராஜேந்திரன் வெளியே வந்து விட்டனர். சந்திப்பின்போது தினகரனிடம் சில விஷயங்களைச் சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா என்கிறார்கள் பெங்களூரு வட்டாரத்தில்.தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்தும் அதிமுக பொதுக் குழுவில் நடந்தவை குறித்தும் தினகரன் சசிகலாவிடம் எடுத்துச் சொல்ல, அதற்கு சசிகலாவோ, “கவலைப்பட வேண்டாம். இனி நடப்பது நமக்கு நல்லவையாகவே நடக்கும். துரோகிகள் விரைவில் சிறைக்குச் சென்றுவிடுவார்கள். இனிவரும் காலங்களில் நமக்குச் செய்த துரோகங்களுக்கு அவர்கள் நன்றாக அனுபவிப்பார்கள். இந்த ஆட்சியும் விரைவில் கவிழ்ந்துவிடும். அதனால், எதுவும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதற்குச் சரியென்று கூறிவிட்டு வெளியே வந்திருக்கிறார் தினகரன்.
சசிகலா எதை மனத்தில் வைத்து இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பதுதான் இப்போதைய அமமுக முக்கிய நிர்வாகிகளின் விவாதமாக இருக்கிறது

கருத்துகள் இல்லை: