சனி, 7 டிசம்பர், 2019

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி

Veerakumar - :tamil.oneindia.com :   சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அதைக் காரணமாக வைத்து தொடர்ந்த வழக்கில், மொத்தம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி வெளியிட்டார். 
அதன்படி 9 மாவட்டங்கள் தவிர்த்து டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது அறிவிப்புக்கு பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக டிசம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதையும் பின்பற்றாமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தமிழகத்தில் டிச. 27, 30ல், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும் வார்டு மறுவரையறையையும், சட்ட முறைப்படி செய்து புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தெளிவாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
2017 ஆம் ஆண்டு வார்டு மறுவரையறை ஆணைய விதிகள், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகள், 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி அடிப்படையிலான இட ஒதிக்கீடு விதி 6 உள்ளிட்ட எதையும் பின்பற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு அதிமுக அரசின் கைப்பிள்ளையாக மாநிலத் தேர்தல் ஆணையர் மாறியிருப்பது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள வெட்கக்கேடு, துடைக்க முடியாத இழுக்கு. உயர்நீதிமன்ற தீர்ப்பை மாநில தேர்தல் ஆணையமும் படிக்கவில்லை. அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்துவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது பற்றி தமிழக அரசும் கவனம் செலுத்தவில்லை. 
 
திராவிட  முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள உத்தரவு உள்ளிட்ட சட்ட விதிகள் அனைத்தையும் விளக்கி டிசம்பர் 7-ஆம் தேதி கொடுத்த மனுவையும் மாநிலத் தேர்தல் ஆணையர் படிக்கவில்லை. டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை! சட்டத்தை படுகொலை செய்யும் ஒரு தேர்தல் ஆணையர், முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் சொல் கேட்டு நடக்கும், அதிமுக கிளைச் செயலாளர் போல மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பழைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையர் புதிய அறிவிப்பு வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் கூட நடத்தாமல், நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். 

உச்சநீதிமன்றத்தை மதிக்காத, இன்னும் சொல்வதென்றால் அவமதிக்கும் மன்னிக்க முடியாத குற்றம் இது. அரசியல் சட்டத்துக்கும், பஞ்சாயத்து சட்டங்களுக்கும் புறம்பான ஒரு உள்ளாட்சித் தேர்தலை, 'யாராவது சென்று தடை வாங்கி கொள்ளட்டும்' என்ற ஒரே நோக்கத்துடன் ஜனநாயகத்திற்கு விரோதமாக வெளியிடுவதற்கு மாநிலத்தில் ஒரு தேர்தல் ஆணையரும், ஒரு தலைமைச் செயலாளரும் நிச்சயமாக தேவையில்லை என்ற எண்ணம், சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கும் திமுக, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை அதிமுக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் செய்துள்ள ஜனநாயகப் படுகொலையை நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வார்டு மறுவரையறை மற்றும் பட்டியல் பழங்குடிகள் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இவற்றை செய்து முடித்த பிறகே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர, வேறு வழியில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: