சனி, 7 டிசம்பர், 2019

ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு உள்ளது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மின்னம்பலம் : திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறா?கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்பட்டது. அந்த ஹோட்டலின் அறை ஒன்றில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாகவும், மற்றொரு அறையில் மதுபானங்கள் இருந்ததாகவும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எந்தவித விளக்கமும் கேட்காமல் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது காவல்துறை தரப்பில், இந்த ஹோட்டலில் திருமணம் ஆகாத ஒரு ஆணும், பெண்ணும் ஒரு அறையில் தங்கியிருந்ததாகவும், மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் லிவிங் டூ கெதர் முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாகக் கருத முடியாதோ, அதுபோன்று இதனையும் கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் 4.5லிட்டர், பீர் 7.8லிட்டர், ஒயின் 9 லிட்டர் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஹோட்டலில் மதுபானங்கள் வைத்திருந்தது குற்றமில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த ஹோட்டலை மூடும் போது சட்டவிதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதி, ஹோட்டலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி 2 நாட்களில் திறக்கவும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: