திங்கள், 2 டிசம்பர், 2019

குஜராத்தில் நித்யானந்தா ஆசிரமத்துக்கு மூடு விழா!

நித்யானந்தா ஆசிரமத்துக்கு மூடு விழா!மின்னம்பலம் : குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் இன்று (டிசம்பர் 2) காலி செய்யப்பட்டது.
சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீது, தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து குழந்தைகள் கடத்தல், நிதி திரட்ட குழந்தைகளை வற்புறுத்தல் என நித்தி மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா, தனது மகள்களை மீட்டுத் தரக் கோரி அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நித்தி குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நித்தி வசம் இருக்கும் ஜனார்த்தனின் இரு மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து குஜராத் போலீஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது.
குஜராத் ஹீராபூரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரமமும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
டெல்லி பப்ளிக் பள்ளி நிர்வாகம், பள்ளியின் ஒரு பகுதி நிலத்தை ஆசிரமம் கட்ட நித்திக்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது. தற்போது ஆசிரமம் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம் அம்மாவட்ட கல்வித் துறை சம்பந்தப்பட்ட பள்ளியில் சோதனை நடத்தியது. இதனையடுத்து, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் குஜராத் மாநில அரசு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
அதில் என்.ஓ.சி எனப்படும் நோ அப்ஜக்‌ஷன் சர்டிஃபிகேட் போலியாக சமர்ப்பித்து அப்பள்ளி அங்கீகாரத்தை பெற்றதாகவும், அந்த சர்டிஃபிகேட் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. மாணவர்களின் நலன் கருதி, 2020ஆம் ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அஜ்மரில் உள்ள சிபிஎஸ்இ-யின் இணைப்பு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) கொடுத்த புகாரின்படி, டெல்லி பப்ளிக் பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி மஞ்சுளா பூஜா ஷிராஃப், நிர்வாகி ஹிடேஷ் வசந்த் மற்றும் முன்னாள் முதல்வர் அனிதா துவா ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவ்வளாகத்தில் இருந்த ஆசிரமத்தை மூன்று மாதத்துக்குள் மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரமத்திலிருந்த துறவிகளும், சன்னியாசிகளும் இன்று வெளியேற்றப்பட்டனர். ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள் உட்பட வெளியேறிய அனைவரும், இரு சொகுசு பேருந்துகள் மூலம் அங்கிருந்து பெங்களூரு பிடதி ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள நித்யானந்தா தினசரி ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம், ஐபி முகவரியை வைத்து அவரை தேட குஜராத் போலீசார் முயன்று வருகின்றனர். எனினும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை நித்தி எங்கிருக்கிறார் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. இதனிடையே ஹீராபூர் ஆசிரமத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ப்ராணபிரியா மற்றும் பிரிய தத்துவா ஆகிய இருவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: