சனி, 14 டிசம்பர், 2019

“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை!’’ – தி.மு.க-விலிருந்து விலகிய பழ.கருப்பையா

கருணாநிதியுடன் பழ.கருப்பையாபழ.கருப்பையாvikatan.com -.பழனியப்பன் : `லக்ஸ் சோப்பை விளம்பரப்படுத்துவதற்கு நடிகைகள் முன்னிறுத்தப்படுவதைப்போல தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் விளம்பரப்படுத்த பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள்’ என்று விமர்சிக்கிறார் பழ.கருப்பையா. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழ.கருப்பையா, தி.மு.க-விலிருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இவர் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச்செயலாளராக இருந்தவர். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட இவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். இவருக்கு சபாநாயகர் பதவி தரப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், அந்த வாய்ப்பு தரப்படவில்லை. ``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி! எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவரான பழ.கருப்பையா ஒரு தனித்த சிந்தனையாளர். அந்த வகையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்திலேயே `துக்ளக்’ பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஆட்சியின் செயல்பாடுகளையும் அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக விமர்சித்தார். அதனால் அவரை அ.தி.மு.க-விலிருந்து ஜெயலலிதா நீக்கினார். உடனே, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் பழ.கருப்பையா.

அதன் பிறகு, தி.மு.க-வில் இணையுமாறு வெளிப்படையாக இவருக்கு அழைப்பு விடுத்தார் அன்றைய தி.மு.க தலைவரான கருணாநிதி. அதையடுத்து, தி.மு.க-வில் இணைந்தார். ஆனால், அங்கு அவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. தி.மு.க பேச்சாளர் என்ற அடையாளத்துடன் இருந்த பழ.கருப்பையா தி.மு.க-விலிருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டோம்.
“தி.மு.க-வில் சேருவதற்கு அப்போதே எனக்கு தயக்கம் இருந்தது. `உங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்கத்தைக் காக்க வேண்டும்’ என்று சொல்லி கருணாநிதி அழைத்ததால் தி.மு.க-வில் சேர்ந்தேன். இன்றைக்கு, பணத்துடன் வருபவர்களுக்குத்தான் தி.மு.க-வில் முக்கியத்துவம் தரப்படுகிறது. அறிவுக்கும் நேர்மைக்கும் அங்கு இடமில்லை.
அதனால்தான், பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை வேலைக்கு வைத்து, அவர்களுக்கு பல நூறு கோடி ரூபாயை அள்ளிக்கொடுக்கிறார்கள். கோடிகளை வாங்கிக்கொண்டு, தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் எப்படியெல்லாம் புரமோட் செய்வது என்று அவர்கள் யோசனை சொல்லப்போகிறார்கள்.

நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் எந்த அளவுக்கு தொண்டு செய்கிறீர்களோ அந்தளவுக்கு மக்களிடம் அறியப்படுவீர்கள். அப்படி அல்லாமல், மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ, அப்படியாகத் தங்களை புரமோட் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறானது.
நம் கருத்துகளுக்கு ஏற்ப நாம் நியாயமாகச் செயல்பட்டு, மக்களிடம் நன்மதிப்பைப் பெற வேண்டும். ஆனால், இவர்களிடம் அந்த நிலை இல்லை.

`லக்ஸ் சோப் எல்லா சரும வியாதிகளையும் நீக்கும்’ என்று நடிகைகளால் புரமோட் செய்யப்படுவதைப்போல இவர்களும் தங்களைப் புரமோட் செய்துகொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இது நல்லதல்ல. பொய்மையின்மீது கட்டப்படும் மாளிகை. ஆட்சியில் அமர்ந்துகொண்டு எல்லா பொய்மைகளையும் செய்வதற்குத்தான் இது வழிவகுக்கும். அரசியல் கட்சி நடத்துவதற்கான பாங்கு அல்ல. 20 கோடி ரூபாய் வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என்றால், அது என்ன நிலை? பணம் வைத்திருப்பவன் எல்லாம் பல்லக்கில் அமர வேண்டும், பணம் இல்லாதவன் பல்லக்கு சுமக்க வேண்டும் என்றால் எப்படி?

வெறும் 11 லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டுதான், தி.மு.க-வை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் அண்ணா. உங்களால் ஏன் முடியவில்லை. உண்மையின் பேரில் ஆட்சிக்கு வர முடியுமா, முடியாதா. நீங்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் தங்களைக் காட்டிக்கொண்டு நிலைநிறுத்திக்கொள்கின்றன.
அதைப்போல அரசியல் கட்சிகள் இந்த ஏஜென்சிகளை வைத்துக்கொண்டு விளம்பரத்தின் மூலம் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
அறிவுடையவர்களுக்கு இவர்கள் இடம் கொடுப்பதில்லை. ஆகவே, பணம் வைத்திருக்கிற செந்தில் பாலாஜி போன்றவர்கள் வந்தால், அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
மாவட்டச் செயலாளர் உட்பட எல்லா முக்கியப் பொறுப்புகளும் கிடைக்கும். அதேநேரத்தில், அங்கிருந்து வந்த அறிவுடையவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் தி.மு.க-வில் எந்த இடமும் இல்லை. ஏனென்றால், அறிவால் தங்கள் கட்சிக்கு எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கிறார்கள். அறிவு பயன்படாத இடமாக தி.மு.க ஆகிவிட்டது” என்றார்.
vikatan.com<

கருத்துகள் இல்லை: