வெள்ளி, 13 டிசம்பர், 2019

2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி : அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.


நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் என்றும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியும், இதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

அதேநேரம், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக அயோத்தி நகரின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக அயோத்தி மூல வழக்கின் மனுதாரான எம்.சித்திக் என்பவரின் வாரிசு மவுலானா சையது அஷத் ரஷீதி, அகில பாரத இந்து மகாசபா, உத்தரபிரதேச ஜாமியத் உலமா இ ஹிந்த் உள்ளிட்ட 18 மனுதாரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களில் 9 பேர் இந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.

இதுதவிர பல்வேறு முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புக் களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களும் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அனைத்து மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த பரிசீலனை திறந்த கோர்ட்டில் இல்லாமல், தலைமை நீதிபதியின் அறையிலேயே நடைபெற்றது.

பரிசீலனைக்கு பின் அனைத்து மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தி வழக்கில் தொடர்புடையவர்கள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள் மற்றும் அவற்றுடன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் மிகவும் கவனத் துடன் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அவற்றை விசாரணைக்கு ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினார்கள்.

இவை தவிர மேலும் 40 பேர் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இவர்களில் யாரும் முன்பு விசாரிக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரர்கள் இல்லை என்பதால், அந்த மனுக்கள் மறுஆய்வுக்கு உகந்தவை அல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்

கருத்துகள் இல்லை: