திங்கள், 9 டிசம்பர், 2019

கடலூரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலைவர் பதவி!

மின்னம்பலம் : ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலைவர் பதவி!ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலமிடப்பட்ட சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்திலுள்ள 27 மாவட்டங்களில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து, அதற்கான அறிவிப்பாணையும் இன்று (டிசம்பர் 9) வெளியிடப்பட்டது. மேலும், இன்று காலை 10 மணி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவருகிறது. திமுக தொடர்ந்துள்ள வழக்கால் தேர்தல் நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தாலும், கிராமப் பகுதிகளில் தற்போது தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டது.
கொம்பன் திரைப்படத்தில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஊர்ப் பொதுமக்கள் ஒன்றுகூடி ஏலமிடும் காட்சி உள்ளது. அதுபோலவே நிஜத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கு ஏலமிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்துள்ளது நடுக்குப்பம் ஊராட்சி. இதற்குட்பட்ட பகுதிகளாக நடுக்குப்பம், நடுமேட்டுக்குப்பம், பாப்பன்கொல்லை, சிறுத்தன்குழி உள்ளிட்ட 4 கிராமங்களில் 2686 பேர் வசித்துவருகின்றனர்.
இந்த நிலையில் நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை இன்று (டிசம்பர் 9) ஏலமிட்டுள்ளனர். தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத் தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நடுக்குப்பம் முன்னாள் ஊராட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த சக்திவேல், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ஏலத்தை எடுத்துள்ளார். தேமுதிக நிர்வாகி முருகன் என்பவர் துணைத் தலைவர் பதவிக்கான ஏலத்தை எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் வரும் 15ஆம் தேதி பணத்தை செலுத்திவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
ரூ.50 லட்சம் கொடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் எடுப்பவர், அதைவிட அதிகம் சம்பாதிக்கத்தானே நினைப்பார். எப்படி மக்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.
அதில், “உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் இது ஓட்டுக்கு மறைமுகமாக பணம் தரும் வகையிலான தேர்தல் குற்றமாகும். எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரித்து, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுக்குப்பம் ஊராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த வழிவகை செய்யவேண்டும்’ உள்ளிட்ட அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலமிடப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிராமத்தினரிடம் பேசியபோது, ‘நாங்கள் கோயில் விவகாரங்கள் குறித்துதான் ஊர்பொதுவில் கூடி விவாதித்தோம். எந்த ஏலமும் நடைபெறவில்லை. ஆனால், தவறான தகவல் பரப்பப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளோம்’ என்று தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை: