புதன், 6 செப்டம்பர், 2017

BBC : பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் சுட்டுக்கொலை.. இந்துத்வாவை கடுமையாக விமர்சித்தவர்!

இந்துத்துவத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தவரும் கன்னட எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் அவர்கள் தன் வீட்டின் முன்னர் சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்டா

வலதுசாரிகளை, வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய 'லங்கேஷ் பத்திரிகே' என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர், தமது வீட்டுக்கு எதிரிலேயே செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க மன்றம் (Communal Harmony Forum) என்ற அமைப்பை தீவிரமாக முன்னெடுத்துவந்தார் கௌரி. "ஆம். கௌரி தமது வீட்டுக்குத் திரும்பியபோது செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த சூழ்நிலை, அதன் நோக்கம் ஆகியவை குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது" என்று பெங்களூரு மாநகரப் போலீஸ் ஆணையர் சுனில்குமார் பி.பி.சி. செய்தியாளர் இம்ரான் குரேஷியிடம் தெரிவித்தார்.


ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தமது வீட்டுக்குத் திரும்பிய கௌரி வீட்டின் கேட்டைத் திறந்துகொண்டிருந்தபோது இரண்டுமுறை நெஞ்சிலும், ஒருமுறை தலையிலும் சுடப்பட்டார் என்று பெயர் வெளியிடவிரும்பாத போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கல்புர்கி கொலை போலவே... பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்ட முறையோடு கௌரியின் மரணம் ஒப்பிடப்படுகிறது.

பகுத்தறிவு குறித்தும், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் பசவேஸ்வரா பற்றியும் கல்புர்கியும் கௌரியும் ஒரேவிதமான கருத்துகளைக் கொண்டிருந்தனர். பசவரின் வசனங்களில் விவரிக்கப்படும் கொள்கைகளை மீண்டும் கடைபிடிக்கத் தொடங்குவது தொடர்பாக கடந்த சில வாரங்களாக விவாதிக்கப்படுவதைப் போன்ற நிலைப்பாட்டையே கல்புர்கியும் கொண்டிருந்தார். அவரும் தமது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆனால் அவர் கொல்லப்பட்டது காலை நேரத்தில். பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி தொடர்புடைய அவதூறு வழக்கு ஒன்றில் அண்மையில் கௌரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கௌரியின் தந்தை பி.லங்கேஷ், ஒரு கவிஞர், எழுத்தாளர், விருது பெற்ற திரைப்பட இயக்குநர். தமது தாய், தமது சகோதரியும் விருது பெற்ற திரைப்பட இயக்குநருமான கவிதா லங்கேஷ், சகோதரன் இந்திரேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார் கௌரி.


தினமலர் :பெங்களூரு, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், பெண் பத்திரிக்கையாளர், கவுரி லங்கேஷ், 45, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கர்நாடகாவில், காங்கிரசை சேர்ந்த சித்தராமையா, முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளிலும், கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்; கன்னட எழுத்தாளராகவும் விளங்கி வந்தார்.
பெங்களூருவில் உள்ள, ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன், சம்பவத்தன்று, நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த, மர்ம நபர்கள், கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல கன்னட எழுத்தாளர், கல்பரூக்கி சுட்டுக்கொல்லப்பட்டதை போன்றே, இவரது படுகொலையும் நடந்துள்ளது.


கொலைக்கு காரணம் என்ன?


இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மீ து கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பா.ஜ. எம்.பி. பிரகலாத் ஜோஷி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கவுரி லஞ்கேஷ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்தார். எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: