வியாழன், 1 ஜூன், 2017

கலைஞர் மேடைக்கு வருவாரா? வரலாம்தானே ? ஸ்டாலின் மறுப்பு?

மின்னம்பலம்: நாளை மறுநாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு  94-வது பிறந்தநாள். கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறது திமுக. ஆனால், கருணாநிதி கோபாலபுரத்தில் அமைதியாக இருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதே, கருணாநிதிக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்குத் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. டிராக்கியோஸ்டமி எனப்படும் இந்தச் சிகிச்சையின் மூலமாகத்தான் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் அப்போது செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும் கூட, கருணாநிதிக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. டாக்டர் மோகன் காமேஷ்வரன் தினமும் கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதி உடல்நிலையைக் கவனித்து வந்தார். இன்னும் அவர்தான் தினமும் கோபாலபுரத்துக்கு வந்து போகிறார். கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் இப்போது தேவைப்படுவதில்லை. அவராகவே சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், அவரது நுரையீரல் வயது முதிர்ச்சி காரணமாக சுருங்கிவிட்டது. இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு 30 சதவீதமாக இருக்கிறது. ஆக்ஸிஜன் உள்ளே போவது குறைய ஆரம்பித்தாலே, மூளை சிந்திக்கும் திறனும் குறைய ஆரம்பிக்கும். கருணாநிதியால் இன்னும் தொடர்ந்து சரியாகப் பேச முடியவில்லை. ‘தொண்டையில் நீண்ட நாட்கள் டியூப் போடப்பட்டு இருந்தால் தொண்டைப் பகுதியில் இருக்கும் சதைகள் செயலிழந்து போகும். மூளையில் இருந்து பேசுவதற்கு தூண்டும் நரம்புகள் செயலிழந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. கருணாநிதிக்கு இந்த இரண்டு காரணங்களால்தான் இப்போது பேச முடியாமல் இருக்கிறது. யாராவது அவருக்கு அருகே போய் நின்றால் கூட உடனே அவர்களைப் பார்த்து கருணாநிதியால் ரியாக்‌ஷன் செய்ய முடியவில்லை.
'அவரால் பேசத்தானே முடியாது. விழா மேடைக்கு அழைத்து வந்து தொண்டர்களை பார்த்து ஐந்து விரலைக் காட்டினாலே போதாதா... அதுவே கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்திவிடும். அப்படி எதுவும் செய்ய முடியாதா?' என ஸ்டாலினிடன் சிலர் ஐடியா சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவரோ, ' அதெல்லாம் சரியா வராது. அவரால் இன்னும் எல்லோரையும் அடையாளம் கண்டுக்க முடியலை. கையைத் தூக்கி ஐந்து விரலைக் காட்டும் அளவுக்கு அவர் இன்னும் தயாராகலை.' என சொல்லிவிட்டாராம்

கருத்துகள் இல்லை: