வெள்ளி, 2 ஜூன், 2017

சென்னை சில்க்ஸ் .. எரியும் வீட்டில் புடுங்க முயற்சிக்கும் அதிகாரிகள்!

டிஜிட்டல் திண்ணை :‘எரியுற வீட்டுல புடுங்காதீங்க...’ முதல்வரிடம் முறையிட்ட சென்னை சில்க்ஸ்!”தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் தீப்பற்றி எரிந்து சரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். கிட்டத்தட்ட முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி தீ தானே அடங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் என்ற சர்ச்சை ஒருபக்கம். அமைச்சர்களுமே கூட சென்னை சில்க்ஸ்க்கு எதிராகத்தான் பேசினார்கள். மிச்சமிருக்கும் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டது. சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சில விசயங்களை சொல்லி இருக்கிறார்கள்.

’விடியற்காலை 4 மணிக்கு தீப்பிடிச்சதும் தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லப்பட்டது. அவங்க கடைக்கு வந்து சேரும் போது 4.30 மணி ஆகிடுச்சு. வந்ததும் அவங்க சொன்ன முதல் விஷயம், ‘டீசல் இல்லை.. போய் வாங்கிட்டு வரச் சொல்லுங்க...’ என்பதுதான். எங்க ஆட்கள்தான் போய் டீசல் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. வண்டியை வேற லொக்கேஷன்ல திருப்பி நிறுத்தி தண்ணீரை அடிக்க கூட அவங்க தயாராக இல்லை. அந்த லோடுல தண்ணீர் தீர்ந்து போனதும், அடுத்த லோடு தண்ணீர் வரவே இல்லை. ‘ரெண்டு லாரி தண்ணி வாங்கி கொடுங்க..’ என்று அப்பவும் எங்ககிட்டதான் கேட்டாங்க. அதையும் நாங்கதான் செஞ்சோம். இதுக்கெல்லாம் நேரம் ஆகிட்டே இருந்துச்சு. இப்படி லேட் ஆக, ஆக தீ வேகமாக எரிய ஆரம்பிச்சுது. ஏர்போர்ட்டில் ஃபோம் பயன்படுத்தி தீயை அணைப்பாங்க. நாங்கதான் அவங்களோட பேசி, அங்கிருந்து ஒரு வண்டியை கொண்டு வந்தோம்.

‘நாங்க இங்கே இருக்கும்போது நீங்க எதுக்கு வந்தீங்க?’னு அவங்களையும் உள்ளே விடாமல் அரை மணி நேரம் பிரச்னை செஞ்சாங்க. அதுக்குப் பிறகுதான் அவங்களை அனுமதிச்சாங்க. இப்படி ஒவ்வொரு விசயத்திலும் அவங்க தாமதம் செஞ்சிட்டே இருந்தாங்க. அதனால்தான் தீ வேகமாக பரவிடுச்சு. எங்கே மேல தப்பு இருந்தால் நடவடிக்கை எடுங்க. அதே நேரத்துல இனி எங்காவது தீ விபத்து நிகழ்ந்தால் இப்படியெல்லாம் அலட்சியமாக இருக்க வேண்டாம்னு சொல்லுங்க. பணம் கேட்டால் நாங்க கொடுக்கப் போறோம். அதுக்காக எரியுற வீட்டுல புடுங்குறது லாபம் என்கிற மாதிரி தீ எரிஞ்சிட்டு இருக்கும்போது, இதைக் கொண்டு வாங்க.. அதைக் கொண்டு வாங்க... இதெல்லாம் யாரு செய்வாங்கன்னு சொல்லி தீயணைப்பு துறைக்காரங்க பண்ணின அலப்பறை தாங்க முடியலை. தயவு செஞ்சி இனியாவது இப்படி நடக்காம பார்த்துக்கங்க...’ என்று சொல்லி இருக்கிறார்கள். ‘இதெல்லாம் எனக்குத் தெரியாது. யாரும் சொல்லவும் இல்லை. நான் நடவடிக்கை எடுக்குறேன்..’ என்று சொல்லி அனுப்பினாராம் முதல்வர் பழனிசாமி. “ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“தீயிக்குப் பின்னால் இன்னொரு முகம் இருக்கிறதோ?” என்ற கமெண்ட்டை போட்டுவிட்டு ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக். ”தினகரனை திஹார் சிறையில் சென்று பார்த்தவர்களில் ஒருவர் சசிகலாவின் கணவர் நடராஜன். கடந்த திங்கள் கிழமை திஹார் சிறையில் தினகரனை சந்தித்திருக்கிறார் நடராஜன். அப்போது நிறைய விஷயங்களை அவரோடு பேசியிருக்கிறார். பேசியதோடு மட்டுமல்லாமல் தினகரனுக்கு நிறைய அட்வைஸும் செய்திருக்கிறார். தற்போது சென்னை திரும்பி விட்டார் நடராஜன். ’தினகரனால இனி உங்களுக்கு எந்த சிக்கலும் வராது. நான் பேசிட்டேன். நீங்க உங்க வேலைகளை பாருங்க. அவரோ, அவரோட ஆட்களோ உங்க ஆட்சியில தலையிட மாட்டாங்க. நான் என்ன பேசணுமோ அதை பேசி இருக்கேன்..’ என்று டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரிடம் நடராஜன் சொன்னதாக சொல்கிறார்கள். அவர் இப்படி சொல்லி இருந்தாலும், தினகரன் ஆதரவாளர்கள் அவரது வருகையை உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடராஜன் என்ன பேசினார்... தினகரன் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. நடராஜன் சொன்னதை அவர் கேட்பாரா என்பதே வெளியே வந்தால்தான் தெரியும்.”மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: