வியாழன், 1 ஜூன், 2017

Chennai Silks 22 மணித்தியாலங்கள் தொடர்ந்து எரிகிறது !. 4 தளங்களுக்கே அனுமதி 7 தளங்கள் சட்டவிரோதமாக ... இடிந்து கொண்டிருக்கிறது !

சென்னை தியாகராயநகர் உஸ்மான் ரோட்டில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியே புகை மூட்டத்தால் ஸ்தம்பித்தது. ; சென்னை: சென்னை தியாகராயநகர் பகுதி பரபரப்பு மிக்க வர்த்தக மையமாக விளங்குகிறது.; தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ என்ற 7 மாடி துணிக் கடை செயல்படுகிறது. இக்கடையின் தரைத்தளத்தில் துணிக்கடையின் பரிசு பொருட்கள் வழங்கும் பிரிவும், ‘ஸ்ரீகுமரன் தங்க மாளிகை’ நகைக்கடையும் உள்ளது.
கடையின் 1-வது தளத்தில் பட்டுப்புடவைகள் பிரிவும்,
2-வது தளத்தில் பல ரக சேலைகள் பிரிவும்,
3-வது தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் பிரிவும்,
4-வது தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான ஆடை பிரிவும்,
 5-வது தளத்தில் ஆடவர் பிரிவும்,
6-வது தளத்தில் வீட்டு அலங்கார பொருட்கள் பிரிவும்,
 7-வது தளத்தில் நவீன ரக ஆடைகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பிரிவும் உள்ளது. மொட்டை மாடியில் நவீன ரக பிளாஸ்டிக் கூரை வேயப்பட்டு துணிக்கடை ஊழியர்களுக்கான ‘கேண்டீன்’ செயல்பட்டு வருகிறது. நகைக்கடை மற்றும் துணிக்கடையில் வேலை பார்க்கும் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த கேண்டீனில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.


‘தி சென்னை சில்க்ஸ்’ மற்றும் ‘ஸ்ரீகுமரன் தங்க மாளிகை’ கடைகள் தினமும் இரவு 10 மணி வரை இயங்கும். அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு கடையின் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டு, இரவு 11.30 மணிக்கு கடை மூடப்பட்டது. கடையின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாசல்களை பூட்டி, பாதுகாப்பு பணியில் சுமார் 10 பாதுகாவலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பயங்கர தீ: 21 மணி நேரம் எரிந்த தீயால் பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்
கடையின் மொட்டை மாடியில் செயல்படும் கேண்டீனில் பணியாற்றும் ஊழியர்கள் இரவில் அங்கேயே தங்கி இருந்தார்கள். எப்போதும் காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால், கேண்டீனிலேயே ஊழியர்கள் தங்கி, சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு காலை உணவுகளாக இட்லி, கிச்சடி, சாம்பார், தேங்காய் சட்னி போன்ற உணவுகளை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அதிகாலை 4.15 மணி அளவில் கடையின் தரைத்தளத்தில் தீப்பொறிகள் வெடிப்பது போல சத்தம் கேட்டது. தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் என்னவோ, ஏதோவென்று பதறி கடையின் கதவை லேசாக திறந்து பார்த்தனர். அப்போது தரைத்தளத்தில் உள்ள பரிசு பொருட்கள் வினியோகம் செய்யும் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் புகை மேலும் தீவிரமாகி திடீரென்று கடையின் உள்ளே தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் பாதுகாவலர்கள் கடைக்கு மேலே இருந்த கேண்டீன் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடையின் நிர்வாகத்தினர், தீயணைப்பு பிரிவு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் தியாகராயநகர் பகுதி அதிகாலை வேளையிலேயே பரபரப்படைய தொடங்கியது.

தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தியாகராயநகர், தேனாம்பேட்டை நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் முதற்கட்டமாக சம்பவ இடத்துக்கு விரைந்தன. அதனைத் தொடர்ந்து ‘எப்.54-எச்.டி.டி.’ எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர் காக்கும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

இதற்கிடையே தீ கடையின் 2-வது தளம் வரை பரவ தொடங்கியது. எனவே கடையின் மேல் தளத்தில் உள்ள கேண்டீனில் இருந்த 14 ஊழியர்களையும் காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் ஆயத்தமானார்கள். கடையின் பின்பக்கம் உள்ள வாகன நிறுத்தத்தில் ‘ஸ்கை லிப்ட்’ எந்திரத்தை நிறுத்தி, எந்திரத்தில் உள்ள ராட்சத ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடியை அடைந்தனர். கடும் அனல் மற்றும் புகைக்கு மத்தியில் 4 பேர் வீதம் ஊழியர்களை பத்திரமாக மீட்டு தீயணைப்பு வீரர்கள் கீழே கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடையின் 7 தளங்களிலும் தீ முழுமையாக பற்றி எரிய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழக தீயணைப்பு துறை இணை இயக்குனர் சாகுல் அமீது தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கினர். ‘போர்ம் காம்பவுண்ட்’ எனும் ரசாயன கலவையை ‘ஸ்கை லிப்ட்’ எந்திரம் மூலம் அனைத்து தளங்களிலும் உள்ள ஜன்னல்களின் வழியாக கடையின் உள்ளே பீய்ச்சி அடித்தனர். இக்கலவை தெளிக்கப்பட்டதும் நுரை சூழ்ந்து தீயை கட்டுப்படுத்தும் என்பதால் இந்த திட்டத்தை வீரர்கள் கையாண்டனர்.

ரசாயன கலவை தெளிக்கப்பட்டதுமே, தீயின் காட்டம் குறைவது போல தெரிந்தாலும், கரும்புகை அதிகமாக வெளியேறத்தொடங்கியது. இதனால் தியாகராயநகர் உஸ்மான் சாலை முழுவதுமே புகை மண்டலம் சூழ்ந்தது. தீ விபத்து குறித்து அறிந்ததும், அருகில் உள்ள பிற கடைக்காரர்கள் தங்கள் கடைகளை திறக்காமலேயே சென்றுவிட்டனர். ஊழியர்களுக்கும் அவசர விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே பாதுகாப்பு கருதி அப்பகுதி முழுவதுமே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ‘போர்ம் காம்பவுண்ட்’ மட்டுமே தெளிக்கப்பட்டு வந்தநிலையில், அடுத்தகட்டமாக தண்ணீரை பீய்ச்சியடிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து உடனடியாக தடை செய்யப்பட்டது. நகரின் பிற பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மெட்ரோ தண்ணீர் லாரி வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

காலை 9 மணி அளவில் புகை வெளியேற வசதியாக கடையின் முன்பக்க கண்ணாடிகள் மற்றும் விளம்பர பலகைகள் உடைக்கப்பட்டன. சரியாக காலை 9.30 மணிக்கு உஸ்மான் சாலை மற்றும் மேம்பாலம் என 2 பகுதிகளிலும் மெட்ரோ லாரிகள் நிறுத்தப்பட்டு, ராட்சத பைப் மூலம் கடைக்குள் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட மறுகணமே வெளியேறும் புகையின் அளவு பல மடங்கு அதிகமானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீவிபத்து பற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயவர்தன் எம்.பி., மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வருவாய்த்துறை அதிகாரி மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி சுகாதார மற்றும் பணிகள் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

பிற்பகலில் கடையின் முன்புறம் உள்ள நுழைவுவாயிலில் பற்றியிருந்த தீ ஓரளவு அணைக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைய தொடங்கினர். ஆனாலும் தொடர்ந்து முன்னேறுவதில் சிரமம் நீடித்ததால் பெரும் சவாலாகவே மீட்பு பணி அமைந்தது. எனினும் கிரேன் உதவியுடன் கடையின் முன்பக்கம் லேசாக பெயர்க்கப்பட்டு, புகையை வெளியேற்றும் பணி நடந்தது.

அதிகாலை 4.15 மணிக்கு பற்றி எரிய தொடங்கிய தீ, மாலை 4.15 மணி கடந்தும் குறைந்தபாடில்லை. தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர்.

மாலை 6 மணி வரை கடையின் சுவர்களில் துளை போட்டு புகையை வெளியேற்றும் முயற்சி நடந்து வந்தது. இதனால் தியாகராயநகர் பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

21 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின.

என்றாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.

மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நுரைக்கலவை எந்திரம் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் நேற்று இரவு கட்டிடத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இந்த தீ விபத்து குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் புகை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, எங்கிருந்து தீ விபத்து தொடங்கியது? என்பது தெரிந்தால் மட்டும் தான் விபத்துக்கான உண்மை காரணத்தை தெரிந்துகொள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக தகவல் வந்துள்ளது.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: