செவ்வாய், 11 ஜூன், 2013

நீலமலை தேவரின் சட்டம் :தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் செருப்பு அணியக் கூடாது

தேவர் சாதி வெறிதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள வடுகம்பட்டியைச் சேர்ந்த நீலமலை என்பவருக்கு மூளை நிறைய சாதி வெறி நிரம்பியிருக்கிறது. உருப்படியாக ஏதாவது வேலை செய்து சாதிக்கும் திறன் இல்லாத அந்த காட்டுமிராண்டிக்கு அவர்கள் கிராமத்திலேயே வசிக்கும் 250 தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அவமானப்படுத்துவதிலும், ஒடுக்குவதிலும் மட்டுமே தன்னம்பிக்கையும் பெருமையும் இருந்திருக்கிறது.
அந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தனி கோயில், தனி கிணறு, தனி குடியிருப்பு என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் செருப்பு அணியக் கூடாது, ஆதிக்க சாதி பகுதிகளில் வண்டியில் போகக் கூடாது, என்று கொடூரமான பழக்கங்களை சுமத்தி வருகின்றனர் அந்த ஊரின் 650 பிறமலைக் கள்ளர் பிரிவைச் சேர்ந்த தேவர் சாதி மக்கள்.
சென்ற வாரம் திங்கள் கிழமை கள்ளர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை பார்த்து விட்டு தன் இரண்டு நண்பர்களோடு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறான் அருண் குமார் என்ற 11 வயது சிறுவன். நீலமலை, அந்த சிறுவர்களை பிடித்து நிறுத்தியிருக்கிறான். காலில் செருப்பு அணியாத மற்ற இருவரையும் போகச் சொல்லி விட்டு அருண்குமார் காலில் செருப்பு அணிந்திருந்ததால் அவனை மட்டும் பிடித்து வைத்திருக்கிறான் நீலமலை.

தான் காவல் காக்கும் அந்த தெருவில் செருப்பு போட்டுக் கொண்டு வருவதற்கு என்ன தைரியம் உனக்கு என்று குரைத்திருக்கிறான் நீலமலை. தன்னைப் போன்ற ஜந்துக்கள் உலாவும் பகுதிக்கு போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா என்று கேட்டு விட்டு அருண்குமாரை செருப்புகளை தலையில் வைத்து 60 அடி தொலைவில் இருந்த மேடை வரை நடக்கச் செய்திருக்கிறான் நீலமலை.
அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த அருண்குமாரின் தந்தை பாண்டி அவன் கைக்குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டிருக்கிறார். அவன் தாய் நாகம்மாள் செங்கல் சூளையில் வேலை பார்த்து மகனை வளர்த்து வருகிறார்.
நீலமலையால் பாய்ந்து பிடுங்கப்பட்ட அருண்குமார் அவமானத்தாலும் பயத்தாலும் யாரிடமும் அதைப் பற்றி சொல்லவில்லை. இரண்டு நாட்களாக சோகமாக, சரியாக சாப்பிடாமல் இருந்ததை பார்த்து அவன் அம்மா, அவனிடமிருந்து நடந்ததை அறிந்திருக்கிறார். நீலமலையிடம் போய் தட்டிக் கேட்ட நாகம்மாளிடம், தான் செய்தது சரிதான் என்றும் போலீசில் புகார் கொடுத்தால் அவரை கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறான்.
நாகம்மாள் வியாழக்கிழமை அன்று போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். நாகம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீலமலையின் அப்பா பதிவுராஜாவும், தம்பி அக்னியும் வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டனர். நீலமலை பயந்து கொண்டு ஊரை விட்டே தப்பி ஓடி விட்டிருக்கிறான். பீதியில் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த நீலமலை ஞாயிற்றுக் கிழமை மாலை திண்டுக்கல்லில் கைது ஆனான்.
அந்த சாதி வெறியர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட பரம்பரை என்று மீசை முறுக்கி, 11 வயது சிறுவனிடம் வீரம் காட்டிய ஜந்துக்கள் கொட்டடியில் அடைப்பட்டு எதை முறுக்கிக் கொண்டிருக்கின்றன என்று விசாரிக்க வேண்டும். ஒரு தலித் சிறுவன் செருப்பு போடுவதைக் கூட இந்த தேவர் சாதி வெறியர்கள் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதே தலித் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதல் மணம் புரிந்தால் இவர்கள் எவ்வளவு கொலைவெறியில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதாவின் காலில் முறுக்கு மீசை கொண்ட தேவர் சாதி ‘சிங்கங்கள்’ அசிங்கமாய் வீழ்ந்து கிடக்கும் அடிமைத்தனம் குறித்தெல்லாம் வெட்கம் இல்லாத இந்த சாதிவெறியர்கள் எளிய தலித் மக்கள் மீது வன்மம் கொண்டிருப்பது ஏன்? தலித் மக்களின் சுயமரியாதையை அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஓரணியாய் சேர்ந்து மீட்க போராட வேண்டும். அப்போதுதான் இந்த ‘மறவர்களின்’ சாதி வெறி அடியோடு ஒழிக்கப்படும். vinavu.com

கருத்துகள் இல்லை: