புதன், 12 ஜூன், 2013

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!!

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து 57.37 ரூபாயாக உள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, தொடர்ச்சியாக டாலரை வாங்கியதால், டந்த வெள்ளியன்று, நாணயச் சந்தையில், ரூபாயின் மதிப்பு 31 பைசா குறைந்து காணப்பட்டது. இதற்கு முந்தைய சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57.32 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. தற்போது, ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது
காரணம்: எண்ணெய் மற்றும் தங்கம் போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக ரூபாயை விற்று டாலரை வாங்கி, பின்னர் இறக்குமதி செய்கின்றனர். இவற்றால் ஏற்படும் ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு
விளைவு: இந்த நடவடிக்கையால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக, தங்கம் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. ஆகையால் கணிசமான டாலர்கள் தங்கத்தை வாங்குவதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. இதனால், நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே ரூபாயின் மதிப்பு அகல பாதாளத்திற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது
இறக்குமதி: தங்கம் மற்றும் எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகி, வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற சமயங்களில், ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள டாலரை விற்று ரூபாயின் மதிப்பை சமப்படுத்த முயற்சிக்கும். இதுவரை ரிசர்வ் வங்கி இது போன்ற நடவடிக்கையில் இறங்கவில்லை. ரூபாயின் மதிப்பு அதிகமான ஏற்றத்தாழ்வுகளைக் காணும் போது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருட்கள்: ரூபாய் வீழ்ச்சி அடைந்தால் நமக்கென்ன என்று இருந்துவிட முடியாது. கணினி, கைப்பேசி என நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் பல பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றை அதிக ரூபாய் கொடுத்து வாங்குவதால், அந்தப் பொருட்களின் விலையும் உயர்ந்து விடும். இறக்குமதி செய்பவர்கள் அதிக விலை கொடுக்கும் இதே நேரத்தில், நம் ஊரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
tamil.goodreturns.in

கருத்துகள் இல்லை: