கோவாள்ளியில் விடுமுறை வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? “அயம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்” எனும் விடுமுறைக்கான கடிதத்தை உருப்போட்டு எழுதியது நினைவுக்கு வருகிறதா? அதேதான் நம்ம பிதாமகர் அத்வானிஜியும் செய்திருக்கிறார். கோவாவில் பாஜகவின் செயற்குழு கூட்டத்திற்கு அத்வானி வரவில்லை என்று ஊடகங்கள் ரவுண்டு கட்டி அடித்ததும் விழி பிதுங்கிய ராஜ்நாத் சிங், “டாக்டர்கள் சகிதம் தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன், வாருங்கள்” என்றெல்லாம் கொக்கி போட்டாலும் அத்வானிஜி அசைந்து கொடுக்கவில்லை. காரணம் அவரது வயிற்று வலி அத்தகையது!
கோவா செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவர்கள்
மற்ற கட்சிகளின் வரலாற்றில் கூட இத்தகைய வயிற்று வலி காரணமாக பெருந்தலைகள் வரவில்லை என்று ஒரு நிகழ்வைக் கூட கூற முடியாது. அதன்படி ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது வரலாற்றில் அத்வானியின் வயிற்று வலி பொன்னெழுத்துகளில் இடம் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் பாஜக வித்தியாசமான கட்சியில்லையா!

உமா பாரதி, வருண் காந்தி, சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் போன்றோரும் அத்வானிக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் இந்த செயற்குழுவைப் புறக்கணித்தார்கள். சுஷ்மா ஸ்வராஜும் வருவாரா மாட்டாரா என்று திகிலூட்டி, பிறகு 2 மணிநேரம் தாமதமாக கலந்து கொண்டார். ஒருவேளை அத்வானி அணி ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டால் கோவா செயற்குழுவில் என்ன நடக்குமென்பதை எடுத்துக்கூற ஆள் வேண்டுமென்பதாலும் சுஷ்மா கலந்து கொண்டிருக்கலாம்.
அத்வானியின் வயிற்று வலிக்கு என்ன காரணம்?
வாஜ்பாயி அமைச்சரவையில் துணைப்பிரதமராக இருந்து 2004, 2009 தேர்தல்களில் வென்றிருந்தால் பிரதமர் என முன்னிறுத்தப்பட்டு வந்த அத்வானிக்கு தற்போது 85 வயது ஆகிவிட்டது. ஆனாலும் இலட்சியம் மனதிலிருந்து அகன்றுவிடவில்லை. 2014 தேர்தலில் ஒரு வேளை பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் 86 வயதில் பிரதமர் ஆகி இந்த நாட்டுக்கு சேவை செய்யக் கூடாது என்று யார் சொல்ல முடியும்? வாஜ்பாயியின் நெருங்கிய நண்பரான கருணாநிதி கூட 90 வயதிலும் வீல் சேரில் சென்றவாறு காரியங்களைப் பார்க்கவில்லையா? 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக பலவிதத்தில் தயாரானாலும் அத்வானியைப் பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் கற்றுக் கொண்ட சூர்யநமஸ்காரத்தை தினசரி செய்து உடலை தேற்றி வருகிறார்.
இந்த நினைப்பில் மோடி மண்ணை அள்ளிப் போடுகிறார் என்பதாலேயே அத்வானியின் வயிற்றில் வலி தோன்றியது. தேசத்திற்காக கட்சி, கட்சிக்காக தனிநபர்கள், தனிநபரின் நலனை விட கட்சி, தேசத்தின் நலன் முக்கியமானது என்றெல்லாம் மேடையில் பேசுவதற்கு தலைவர்கள் வேண்டாமா? அதைத்தான் அத்வானிஜி பணிவாக முன்வைக்கிறார்.
ஜெயலலிதா, மோடி
நரேந்திர மோடி – பாஜகவின் ஜெயலலிதா
ஒருவேளை மோடி பிரதமரானால் அத்வானி மட்டுமல்ல பாஜகவில் உள்ள பல தலைகளது அரசியல் வாழ்வும் அதோகதியாக முடிந்துவிடும். எப்படி? வேண்டுமானால் ஜெயலலிதாவைப் பாருங்கள். இன்று அதிமுகவில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பெயரை உங்களால் சொல்ல முடியுமா? இல்லை அதிமுகவில் ஜெயலலிதாவை தவிர்த்து யாரெல்லாம் கட்சியின் மாநில பொறுப்புக்களில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
இதற்கு பதில் தெரியாது என்றால் அது பொதுஅறிவின் குறைபாடு அல்ல. அதிமுகதான் அம்மா, அம்மாதான் அதிமுக எனும் எளிய உண்மையில் மற்ற அனாமதேயங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. போலவே மோடிதான் பாஜகவின் தலை என்று தீர்மானமானால் மற்ற தலைவர்களது இடம் உருக்கி ஓட்டி விடப்படும். இதுதான் மையமான பிரச்சினை.
ஆகவேதான் வாழ்விழக்கப் போகும் தலைவர்களது சார்பில் அத்வானிஜி அவர்கள் வயிற்றுவலியை ஆயுதமாகக் கொண்டு தர்ம யுத்தம் ஆரம்பித்திருக்கிறார். பதவிக்கான சண்டை என்று வந்துவிட்டால் மகாபாரதமா, பாரதீய ஜனதாவா என்று பிரித்து பார்க்க கூடாதல்லவா?
சென்ற நூற்றாண்டில் ரத யாத்திரை சென்று ஒற்றை இலக்க பாராளுமன்ற உறுப்பினர்களை மூன்றிலக்கமாக மாற்றியது அத்வானிதான் என்று உலகமே ஒத்துக் கொள்கிறது. அப்போது எத்தகைய மனநிலையில் இருந்திருப்பார் அத்வானி? எனினும் அடுத்த நூற்றாண்டில் ஒரு குஜராத்தி, பிரம்மச்சாரி பனியாவால் தான் தோற்கடிக்கப்படப்போகிறோம் என்று அவரால் கற்பனை கூட செய்திருக்க முடியாதில்லையா?
இதனால்தான் இதே அத்வானி 2001-ல் குஜராத் முதலமைச்சர் பதவிக்காக மோடியை சிபாரிசு செய்தார். அப்போது முதலமைச்சர் பந்தயத்தில் முன்னணியில் இருந்த விசுவ இந்து பரிஷத்தின் பிரவீன் தொகாடியா தனக்கு கட்டுப்படமாட்டார் என்று மதியூகத்துடன் மோடியை ஆதரித்தவர் அத்வானி. கோஷ்டி பார்த்து பதவி கொடுப்பது எனும் இந்த சில்லறை செயல்கள் அனைத்து ஓட்டுக்கட்சிகளிலும் உள்ளவைதான். தமிழக காங்கிரசில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோஷ்டிகள் உண்டென்றால் பாஜகவில் அது கொஞ்சம் குறைவாக இருக்கலாம். அந்த குறைவுதான் அது வித்தியாசமான கட்சி என்ற பாராட்டிற்கு காரணமாகிறது.
இதே கோவாவில் 2002 குஜராத் கலவரம் காரணமாக “ராஜதர்மத்திலிருந்து விலகினார்” என்று மோடியை பதவியிலிருந்து நீக்க வாஜ்பாயி கோஷ்டி முயன்ற போது மோடிக்கு ஆதரவாக களத்தில் நின்று கம்பு சுழற்றியவர் சாட்சாத் அத்வானிதான். அப்படி அத்வானியால் வளர்த்துவிடப்பட்ட மோடி இன்று வளர்த்த கடாவாக மோதுகிறார். அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனிலிருந்து, அத்வானியால் வளர்க்கப்பட்ட மோடி வரை வரலாறு இத்தகைய தாய் – சேய் மோதல்களை பதிவு செய்திருக்கிறது.
மோடி, அத்வானி
அத்வானி வளர்த்த கடா…
அடகுக்கடையில் பவுன் என்ன விலை என்று கூறும் சேட்டு கெட்டப்பினை கொண்டிருக்கும் ராஜ்நாத் சிங்கோ, இல்லை பாலிவுட் படங்களில் கிளப் டான்சை ரசித்து பார்க்கும் கோட்டு சூட்டு போட்ட சேட்டுக்களின் கெட்டப்பில் இருக்கும் நிதின் கட்காரியோ பாஜக தலைவர்கள் ஆனதற்கு அத்வானியின் இந்த எச்சரிக்கை உணர்வுதான் காரணம். ராஜ்நாத் சிங்கிற்கும், நிதின் கட்காரிக்கும் அவர்களது வீட்டிலேயே ஓட்டு விழாது என்ற உண்மையில்தான் அவர்கள் தலைவர்களாக அத்வானியால் அங்கீகரிப்பட்டிருந்தார்கள்.
பாஜகவில் அத்வானியின் எதிர் கோஷ்டிகள் தங்களது எதிர்காலத்தை மனதில் கொண்டு மோடியினை ஆதரித்தார்கள். தற்செயலாக மோடி மூன்று முறையும் குஜராத்தில் வெற்றி பெற்றதும், இந்திய தரகு முதலாளிகள் மற்றும் தேசிய ஊடகங்களின் ஆதரவும் பல்வேறு காரணங்களால் அவருக்கு கிடைத்திருப்பதும் இந்த அணியின் கையை மேலோங்கச் செய்திருக்கின்றன. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் இருப்பது துவங்கி கர்நாடகா உள்ளிட்ட தோல்விகள் வரை சரிந்து கிடக்கும் பாஜகவின் உணர்ச்சியை மோடியை வைத்து தூக்கிவிடலாம் என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.
இப்படி ஆளும் வர்க்கமும் அத்வானியின் எதிர் கோஷ்டிகளும் ஒரு சேர ஆதரிக்கும் நிலையில்தான் மோடி வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவின் தலைமைப் பிரச்சாரக் குழு தலைவராக கோவா செயற்குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது பிரதமருக்கு முந்தைய பதவி என்றும் கூறலாம். பாஜகவின் பிரச்சாரக் குழு தலைமைதான், கூட்டணி, தேர்தல் உத்திகள், பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் தேர்வையும் முடிவு செய்யும். அதன்படி பாஜகவின் தேர்தல் வெற்றி ஆதாயங்கள் அனைத்தும் மோடியின் காலுக்கு கீழே சமர்ப்பிக்கப்படும். இதுதான் அத்வானி கோஷ்டியை அச்சுறுத்துகிறது.
மேலும் தன்னுடைய கட்சிக்காரனே ஆனாலும் பிடிக்கவில்லை என்றால் பாண்டேவுக்கு நடந்தது போல போட்டுத் தள்ள மோடி தயங்க மாட்டார். தன்னுடைய இமேஜைக் காப்பாற்றுவதற்காக கோட்னானிக்கு தூக்குத் தண்டனை கொடு என்று முதலில் கேட்டவர் இந்த மோடிதான் என்பதையெல்லாம் சேர்த்துப் பார்ப்பவர்கள் என்ன முடிவுக்கு வர முடியும்? ஆக நரேந்திர மோடி என்பவர் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல சொந்த கட்சிக்காரனுக்கும் ஆபத்தானவர்தான்.
மோடி கலவரம்
நரவேட்டை புகழ் மோடி
எனவே மோடியின் எதிர் கோஷ்டிகளின் கவலைக்கு அவர்களுடைய ஈகோ, சொந்த அரசியல் வாழ்வு, மோடி குறித்த பயம் என பல விசயங்கள் காரணமாக இருக்கின்றன. இவற்றை வெறுமனே பதவி ஆசை என்று சுருக்கிப் பார்ப்பது அந்த மகான்கள் நடத்தும் பாரதப் போரினை மட்டம் தட்டுவதாகும்.
அதே நேரம் இந்தப் பாரதப் போரில் தெருவோர நாய்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் இருக்கின்றன என்பது துரதிர்ஷடமானது. பிரச்சாரக் குழு தலைவர் பதவி ஏற்ற உடன் அத்வானியிடம் பேசியதாகவும், அவர் ஆசீர்வதித்ததாகவும், நான் கௌரவம் பெற்றேன் என்றும் மோடி டிவிட் போடுகிறார். பிறகு அத்வானி மூன்று கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார் என்றதும் உடன் தொலைபேசியில் அப்படி செய்து தொண்டர்களை ஏமாற்றாதீர்கள் என்று பேசியதாகவும் மோடி கூறினார். இவையெல்லாம் அத்வானி கோஷ்டிகளை வெறுப்பேற்றுவதற்கு மோடி நடிக்கும் நாடகம்.
அதனால்தான் ராஜினாமா முடிவை வாபஸ் பெற வைப்பதற்கு ராஜ்நாத் சிங்கும், மோடியும் அத்வானி வீட்டுக்கு செல்ல முயன்ற போது மோடிக்கு வீட்டில் நுழைய அனுமதியில்லை என்று அத்வானி முறைக்க சிங் மட்டும் சென்றிருக்கிறார். கோவா செயற்குழுவுக்கு முன்பே மோடியை கடுப்பேற்றும் விதமாக வாஜ்பாயிக்கு நிகரானவர் சுஷ்மா ஸ்வராஜ் என்றும், மோடியை விட மத்தியப்பிரதேசத்தின் சௌகான் நல்லாட்சி புரிகிறார் என்றும் உசுப்பேற்றியவர் இந்த அத்வானி.
பதிலுக்கு மோடியும் உடனே டெல்லியில் உள்ள தனது அல்லக்கைகளுக்கு போன் போட்டு அத்வானி வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கெல்லாம் இவர்கள் எங்கே பயிற்சி எடுத்தார்கள்? ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அந்தக் காலத்து நடிகர் அசோகன் போடும் கஞ்சி போட்ட காக்கி நிக்கர் சகிதம் கலந்து கொண்டவர்கள்தான் அத்வானி, மோடி எனும் இரண்டு ஸ்வயம் சேவகர்கள். அதனாலேயே என்னவோ இந்த குடுமிபிடிச் சண்டையிலும் ஆர்.எஸ்.எஸ்-ம் பஞ்சாயத்து செய்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் தலைமை கூட ஆரம்பத்தில் மோடி எதிர்ப்பு கோஷ்டியில்தான் இருந்தது. பின்னர் அவரைப் பகைத்துக் கொண்டால் ஸ்வயம் சேவகர்களையே நமக்கு பகையாக்கி விடுவார் என்று வேறு வழியில்லாமல் மோடி முன் அடிபணிந்து நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு வருகை தரும் ஸ்வயம்சேவர்களின் எண்ணிக்கை நாடெங்கும் குறைந்து வரும் நிலையில், பல நகர்ப்புறத்து ஷாகாக்கள் மூடப்படும் நிலையில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால்தான் தனது நிலையை ஏதோ கொஞ்சம் ஓட்ட முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. அதனாலேயே சந்தர்ப்பவாதமாக மோடியுடன் கூட்டு வைத்துக் கொள்கிறது.
பீஷ்மர் அத்வானி
படம் : நன்றி – டெலிகிராப் இந்தியா
அத்வானி ராஜினாமா நாடகத்தில் உள்ள காமடி காட்சிகளை வைத்து ஊடகங்களும், காங்கிரஸ் கட்சியும் புழுதி பறக்க உரித்ததை படித்திருக்கலாம். பாஜக தலைவர்களும் அத்வானி வீட்டில் தவம் கிடந்து கெஞ்சினர். இறுதியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தொலைபேசியில் அத்வானியிடம் பேசி தேசமே பெரிது என்று நினைவுபடுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தாராம்.
நிஜத்தில் மோடிக்கு இப்போது கொடுக்கப்பட்ட பதவியை பிரதமர் பதவி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம், தேர்தலின் போதும், தேர்தலுக்கு பிறகும் பீஷ்ம பிதாமகரிடம் ஆலோசிக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அத்வானியிடம் அளிக்கப்பட்டனவாம். ஆனால் அத்வானிக்கு வயதாகிவிட்டது, இருக்கப் போவது எத்தனை வருடங்கள் என்ற நிலையில் அவரை ஒரு பொருட்டாக மோடி கோஷ்டி கருதாது. ஆனால் ஊடகங்களுக்கு வாய் மெல்ல அவல் கொடுத்த கதையாக அவரது ராஜினாமா மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த மன்றாடல், வெற்று வாக்குறுதிகள் மூலம் வயிற்றுவலி வாபஸ் நாடகம் இனிதே நடந்தேறியிருக்கிறது.
அதே நேரம் மோடி கோஷ்டியும், ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மைப் பிரிவும் நரேந்திர மோடியை முன்னிறுத்தினாலும் குஜராத்திற்கு வெளியே அவரது முகத்திற்க்காக ஓட்டு விழும் வாய்ப்புகள் மிகக் குறைவு. பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறுவது சாத்தியமில்லை என்ற கூட்டணி ஆட்சியின் காலத்தில் மோடி வித்தையின் அற்புதம் வெளிப்படும் ஏரியா மிகவும் குறைவு.
இதன்றி சிவசேனா, நிதீஷ் குமார், நவீன் பட்நாயக், முலாயம், என்று பல கட்சியினரும் மோடியை விரும்பவில்லை. தமிழ்நாட்டில் சில பார்ப்பன அம்பிகளும், ஜெயலலிதாவைப் போன்றவர்களும் கூட மோடியை மட்டும் ஆதரிக்கிறார்களே அன்றி பாஜகவை ஆதரிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இத்தகைய சூழ்நிலையில்தான் அத்வானி போன்ற மோடியின் எதிர்தரப்பு கோஷ்டிகளுக்கு கொஞ்சம் வாழ்க்கையை காலம் கனிவுடன் வழங்கியிருக்கிறது.
ஆனாலும் நரவேட்டை மோடிக்கு நிகரான ரத்த யாத்திரை புகழ் அத்வானிக்கு இந்த நாடகத்தில் கிடைத்த காந்தியவாதி போன்ற ஒரு நற்பெயர் இருக்கிறதே அதுதான் இந்த அவல நாடகத்தில் நமது மனதை நெருட வைத்த ஒரு காட்சி!