புதன், 12 ஜூன், 2013

திமுக காங்கிரஸ் ஊடல் தீர்ந்தது ? திருநாவுகரசர் வீட்டு திருமணத்தில் பிரிந்தவர் கூடினர்?

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதால், கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரம் போடப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வெளியேறியது: ஐ.நா., சபையில், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மையப்படுத்தி, மத்திய அரசை விட்டு, தி.மு.க., வெளியேறியது. 2004ம் ஆண்டிலிருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்த, தி.மு.க., ஐ.மு., கூட்டணியிலிருந்தும் விலகிக் கொண்டது.காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை என, கருணாநிதி அறிவித்ததும், அறிவாலயத்தில், தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்து, தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பதிலுக்கு காங்., தொண்டர்களும், சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர். வாழ்த்தினார்: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 90வது பிறந்த தினத்தை ஒட்டி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி, கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்தினார். தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரும், வாழ்த்து செ#தியை வெளியிட்டனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., கோஷ்டி தலைவர்களில் ஒருவருமான, திருநாவுக்கரசரின் மகன் அன்பரசன் திருமணம், சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த திருமணத்தை, கருணாநிதி தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். மன்மோகன் சிங், சோனியா, ஞானதேசிகன், சிதம்பரம், வாசன் போன்ற தலைவர்களின் உருவப்படங்களுடன், கருணாநிதியின் உருவப்படத்துடன் வரவேற்பு பேனர்கள், சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ளன. அறிவாலயம், சத்தியமூர்த்தி பவனை சுற்றி சோனியா, கருணாநிதி உருவப் படங்கள் கொண்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.


கேள்வி:

ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., 5 இடங்களில் போட்டியிடுகிறது. 6 வது சீட்டை கைப்பற்ற, தி.மு.க., போட்டியிட்டால், தே.மு.தி.க., காங்., போன்ற கட்சிகள் ஆதரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு விடை அளிக்கும் வகையில், திருமண விழாவில் கருணாநிதி, தன் பேச்சு மூலம், ராஜ்யசபா தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும், திருமண விழாவிற்கு தலைமை வகிக்கும் கருணாநிதியுடன், டில்லியிலிருந்து வருகை தரும் காங்., தலைவர்கள், தமிழக காங்., கோஷ்டி தலைவர்களும் கைகோர்ப்பதால், இந்த நிகழ்வு, திருமண மேடையில், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி, தி.மு.க., - காங்., கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரமாக அமையும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: