செவ்வாய், 11 ஜூன், 2013

அதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் பீதியில் தேமுதிக ? ராஜ்யசபா தேர்தல்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் மேலும் பல தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்கு தாவி போட்டி தேமுதிக உருவாகக் கூடிய ஒரு நிலை உருவாகியிருப்பதால் அக்கட்சி தலைமை பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இம்மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 151 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் அதிமுக 5 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுகவுக்கான பலத்தின் அடிப்படையில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. எஞ்சிய சபாநாயகர் உட்பட அதிமுகவுக்கு 15 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அதிமுகவின் 5வது வேட்பாளருக்கு அவசியமாகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதேபோல் பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். இவர்கள் போக மேலும் 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்த 14 பேரில் ஏற்கெனவே அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இருப்பதால் அவர்கள் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கலாம். இந்த 6 பேரும் போக மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவை. சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 8 எம்.எல்.ஏக்கள் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வாக்களிக்க வைக்க வேண்டும். அப்படி மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ‘பகிரங்கமாக' அதிமுக ஆதரவு அதிருப்தி அணிக்குத் தாவினால் போட்டி தேமுதிக உதயமாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மேலும் 6வது இடம் யாருக்கு என்பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடித்தே வருகிறது. தேமுதிக அல்லது திமுக ஏதாவது ஒரு முடிவை அறிவிக்கும்பட்சத்தில் அடுத்த பரபரப்பு உருவாகும்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: