ஞாயிறு, 9 ஜூன், 2013

BJP பிரசார தலைவராக மோடி நியமனம் -அத்வானி இன்றும் 'ஆப்சென்ட்'

பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பாஜகவின் தேசிய பிரசாரக் குழுவின் தலைவராக இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டார். பாஜக தேர்தல் திட்ட வகுப்புக் கமிட்டியின் தலைவராக மோடி நியமிக்கப்படுவதாக இன்று கோவாவில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தின் போது பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பை ராஜ்நாத் சிங் வெளியிட்டதும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைத்தட்டல் நீடித்ததாம்.  இந்த அறிவிப்பின் மூலம் தேசிய அரங்குக்குள் மோடி நுழைகிறார். முன்னதாக மோடியை இப்பதவிக்கு வர விடாமல் தடுக்க அத்வானி கோஷ்டி கடுமையாக முயன்றது என்பது நினைவிருக்கலாம். அத்வானி கூட்டத்திற்கே வராமல் புறக்கணிப்பு செய்தார் என்பதும் முக்கியமானது. புதிய பதவியின் மூலம் தேசிய அளவிலும் மாநிலஅளவிலும் நடைபெறும் தேர்தல்களில் மோடி தலைமையிலான பிரசாரக் குழு திட்டமிடலை மேற்கொள்ளும். அதாவது இனிவரும் தேர்தல்களை மோடி தலைமையில்தான் பாஜக சந்திக்கப் போகிறது.
முன்னதாக மோடிக்கு எதிராக திடீரென திரும்பிய அத்வானி, கோவா தேசிய செயற்குழுக் கூட்டத்தின் 2நாள் நிகழ்விலும் பங்கேற்கவில்லை. பாஜக தொடங்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இப்போதுதான் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கூட்டத்தின்போது மோடி அறிவிப்பை ராஜ்நாத் சிங் அறிவித்தபோது அவருக்கு அருகே அமர்ந்திருந்த அத்வானியின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். மேலும், மோடி நியமனத்தை வரவேற்று தொடர்ந்து கைத்தட்டல் நீடித்தபோதும் சுஷ்மாவின் முகத்தில் ஈயாடவில்லை.
முன்னதாக மோடி நியமனத்தை வெளியிட்டு ராஜ்நாத் சிங்கூறுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் என்பதுமிகப் பெரிய சவால். இந்த நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை, பாஜக தேசிய பிரசாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கிறேன் என்று அறிவித்தார். இதற்கிடையே, அத்வானி கூட்டத்தில் பங்கேற்காதநிலையில் மோடி அறிவிப்பை வெளியிடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இன்று காலை வரை ராஜ்நாத் சிங் இருந்ததாக கூறுகிறார்கள். இருப்பினும் பாஜகவுக்கு அருளாசி புரிந்து வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையிடமிருந்து பச்சைக்கொடி வந்ததைத் தொடர்ந்து மோடி அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார் ராஜ்நாத் சிங் என்று கூறப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: