புதன், 5 செப்டம்பர், 2012

அன்னலட்சுமி புகார் : கம்பம் MLA மறுப்பு



 தி.மு.க. எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனின் (ரூபேசின் மாமா) ஆட்கள் எனது கணவரை கடத்தி சிறை வைத்துள்ளனர்.
அன்னலட்சுமி கூறியுள்ள புகாரை  எம்.எல்.ஏ.  கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் ரூபேஷ், அவரது தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் மறுக்கின்றனர்.
சென்னை சாலிகிராமம் வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. பிசியோதெரபி முடித்துள்ள இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2002-ம் ஆண்டு, சதீஷ் என்பவருக்கும், அன்னலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரு ஆண் குழந்தை பிறந்த பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அன்னலட்சுமி, கணவரை பிரிந்து வாழ்ந்தார்.
இதன் பிறகு தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ரூபேஸ் என்பவருடன், அன்னலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தனர். கடந்த மாதம், வடபழனியில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் அன்னலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மதியம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வடபழனியில் எனது வீட்டில் இருந்த காதல் கணவர் ரூபேசை, அவரது மாமாவும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான கம்பம் ராமகிருஷ்ணன் ஆட்கள் கடத்திச் சென்று விட்ட தாகவும், அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வடபழனி உதவி கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் காதல் கணவர் ரூபேசை மீட்கும் வரை ஓயப்போவதில்லை என்று அன்னலட்சுமி கூறியுள்ளார். இது  குறித்து அவர்,   ‘’நானும், ரூபேசும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எனது உறவுக்கார வாலிபர் ஒருவரின் மூலம் அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. நான் ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவள் என்பது தெரிந்தும் ரூபேஸ் என்னை ஏற்றுக் கொண்டார். பல தடங்கல்களை தாண்டி, கடந்த மாதம் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
இரண்டு நாட்கள் கழித்து நான் வேலைக்கு வந்த பின்னர், ரூபேஸ் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நேரத்தில் அங்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனின் (ரூபேசின் மாமா) ஆட்கள் எனது கணவரை கடத்தி சிறை வைத்துள்ளனர்.
இதுபற்றி தெரிய வந்ததும் நான் போனில் ரூபேசை தொடர்பு கொண்டு பேசினேன். வீட்டில் பேசிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் வந்து விடுகிறேன் என்று அவர் கூறினார். அதன் பிறகு அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. அவரது வீட்டில் இருப்பவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டபோது, என்னை கடுமையாக மிரட்டினர்.
கம்பம் ராமகிருஷ்ணனும், என்னிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர், இது சரியில்லை. ரூபேசை விட்டு விலகி விடு என்று கூறினார். சொத்துக்கு ஆசைப்பட்டு, நான், ரூபேசை திருமணம் செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் கூறுகிறார்கள்.

எனக்கு அவர்களின் சொத்துக்கள் எதுவும் வேண்டாம். ரூபேசுடன் சேர்ந்து வாழ்வதற்கே நான் ஆசைப்படுகிற«ன். எனவே போலீசார் இதில் உரிய நடவடிக்கை எடுத்து, காதல் கணவரை சேர்த்து வைக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

 இது குறித்து ரூபேஷிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,  ‘’அன்னம்மாள் என்கிற பெண் குளிக்கும் போது பாத்ரூமில் யாரோ ஒருவன் எட்டிப்பார் த்துவிட்டான். 
இது சம்பந்தமாக அவர் வடபழனி போலீசில் புகார் கொடுக்க  உதவி செய்யும்படி,  ராஜன் என்கிற நண்பர் கேட்டுக்கொண்டார். 
இந்த ராஜனின் சகோதரிதான் அன்னம்மாள்.  இந்த அளவில்தான் எனக்கு அவரைத்தெரியும்.  எனக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.
அந்தப்பெண் அன்னம்மாளுக்கோ திருமணமாகி எட்டு வயதில் இரு குழந்தாஇ உள்ளது.  என்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் மோசடியான ஒரு புகாரை கொடுத்திருப்பதோடு, என்னுடைய உறவினர் எம்.எல்.,ஏ. ராமகிருஷ்ணனையும் இதில் சம்பந்தப்படுத்தி, சொல்லிவருவது  மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்று கூறினார்.
 திமுக எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது,  ‘’இது தேவையற்ற ஒரு பரப்புரையாகும்.   ரூபேஷ் எனது மனைவியின் தம்பி மகன் என்ற உறவை வைத்துக்கொண்டு இப்படி கயிறுதிரிப்பது சரியல்ல.   மேலும்,  என்னுடைய உறவினர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்று சொல்லி,  ரூபேஷ் மிரட்டியதாக சொல்லப்படுவதும் தவறான ஒரு விசயம்’’ என்றார்.

ரூபேஷின் தந்தை ரவிச்சந்திரன், ‘’என்னுடைய மகன் ரீஜினல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார்.  அதன் மூலம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறார்.  அவரிம் பணம் தாராளாக புழங்குவதை அறிந்து கொண்டதால், அவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் இப்படி வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள். 

அந்த பெண் அன்னம்மாள் பொய்யான புகார் ஒன்றையும், கொடுத்திருக்கிறார்.   போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து நாளை விரிவாக  மனு கொடுக்கவிருக்கிறோம்.  சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம்’’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: