செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சுஷ்மாவுடன் ரெட்டி சகோதரர்கள்..சிறையில் ராஜ உபச்சாரம்!

ஜனார்தன-ரெட்டி
சுஷ்மா சுவராஜுடன் ரெட்டி சகோதரர்கள்
ர்நாடக மாநிலத்தின் சுரங்க மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களில் இளையவரான சோமசேகர ரெட்டியிடமிருந்து கடந்த ஆக-30 அன்று ரூ.15,000ஐ சிறை கண்காணிப்பு அதிகாரிகள் கைப்பற்றினார்களாம். ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இச்சகோதரர்களில் நடுவில்லனான ஜனார்த்தன ரெட்டிக்கு சிறையில் ஏறக்குறைய வீட்டளவுக்கு ராஜ உபச்சாரமாம்.
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் கர்நாடக மாநிலத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்குமளவுக்கு செல்வாக்கு மண்டலமாக வளர்ந்து கொண்டவர்கள். இவர்கள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் வாதிகள் அல்ல. தமிழகத்தின் மதுரை மாவட்ட கிரானைட் மோசடியின் பெரிய வடிவம்தான் ரெட்டி சகோதரர்கள்.

மோசடிகள், மிரட்டல்கள், விலை ஏறுவதற்கு ஏற்ப காலம் கடத்துதல், ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்காமல் இருத்தல் என இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கட்சி வேறுபாடுகளை தாண்டி எஸ்.எம். கிருஷ்ணாவையும் நண்பராக வைத்திருப்பார்கள், எடியூரப்பாவையும் தமக்கு எடுபிடியாக்குவார்கள். காங்கிரசை பதம் பார்க்க ஜெகன் மோகன் ரெட்டியையும் வளர்த்து விடுவார்கள். கர்நாடகத்தை தாண்டி ஆந்திரத்திலும் ரெட்டி சகோதரர்களின் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
விதிமுறைகளை மீறி வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இரும்பு என்ற பெயரில் ஏற்றுமதி செய்து கடந்த ஆண்டு மாத்திரம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி வகையில் தனது கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள், சுவாசக் கோளாறுகளை உருவாக்குமளவுக்கு தொழிலாளிகளுக்கு பணிப்பாதுகாப்பின்மை என இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகம்.
க‌டந்த ஆண்டு செப்டம்பரில் ஊழல் புகாரில் சிக்கிய இவர்கள் ஹைதராபாத் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையதிகாரிகள் இவர்களுக்கு அளித்திருக்கும் வசதிகள் என்ன? பிரத்யேகமாக வெளுத்து வாங்கப்படும் துணிமணிகள், லேப் டாப் சகிதம் ஒரு உதவியாளர், வாரம் இருமுறை மசாஜ் செய்ய தனி ஆள் என ஏகப்பட்ட வசதிகள். ஜனார்த்தன ரெட்டி தனது பிறந்த நாளான ஜன 11 அன்று சிறைக்கைதிகள் அனைவருக்கும் கறிவிருந்து வைத்துள்ளார். சிறையதிகாரி தனிப்பட்ட முறையில் இவருக்கு வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து வேறு வைத்தாராம்.
த‌னது வீட்டில் நீச்சல் குளம், தனியாக ஹெலிகாப்டர், மூன்றடுக்கு பாதுகாப்பு என இருக்கும் இவர்களது சராசரி சொத்து சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும். கணக்கில் காட்டாத தொகை பற்றி சொல்லி மாளாது. ஆனால் இவர்கள் அடித்த நிலக்கரி கொள்ளைக்காக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அதிகபட்சம் ஆறு மாதம் தான் தண்டனை வழங்க முடியுமாம்.
ஊழலிலேயே பெரிய ஊழலான தனியார் மயம் இன்னமும் குற்றவாளியாக்கப்படவில்லை. ஆனால் ரெட்டிகள் டன் ரூ 27 க்கு வெட்டியெடுக்கும் தாதுவை 7000 க்கு சந்தையில் விற்று கொள்ளை லாபம் அடிக்கும்போது, இதனை அரசே செய்தால் அரசுக்கு லாபம் தானே எனக் கேள்வி கேட்கும் பழங்குடியின மக்களுக்கும், நக்சல்பாரிகளுக்கும் பசுமை வேட்டை என்ற பெயரில் சிஆர்பிஎப் விஜயகுமாரின் துப்பாக்கி போகிறது.
உலகமயமாக்கல் துவங்கிய 20 ஆண்டுகளில் ஊழலில் சிக்கும் பெரிய முதலைகளை எல்லாமுமே வசதியாகத்தான் சிறையில் கூட இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கோ அன்றாட வாழ்வே சிறை போலத்தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: