புதன், 5 செப்டம்பர், 2012

மதுரை புத்தகக் கண்காட்சி சிறப்பாக அமைத்திருந்தது


மதுரைக்காரர்களுக்கு தமுக்கம் என்றாலே கண்காட்சிதான் நினைவுக்கு வரும். சித்திரைக் கண்காட்சி, தொழில் வர்த்தகக் கண்காட்சி என ஆண்டு முழுவதும் ஏதாவது கண்காட்சி நடந்து கொண்டே இருக்கும். பி.ஆர்.பி, அழகிரி போன்ற மதுரையின் பெரிய பெரிய தலைகளின் இல்ல விழாக்கள் இங்கு தான் ஊர் வியக்க நடைபெறும். ராணி மங்கம்மாள் தன் அரண்மனையில் (அதுதான், இன்றைய காந்தி மியூஸியம்) இருந்து யானைகள், குதிரைகள், வீரர்களின் சாகசங்களையும் சண்டைகளையும் வேடிக்கை பார்க்கப் பயன்படுத்திய திடல்தான் தமுக்கம்.

ஆகஸ்ட் 30 அன்று தொங்கிய 7ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவைக் காணச் சென்றிருந்தேன். மாலைப் பொழுது என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. அனுமதியும் பார்க்கிங்கும் இலவசம். உள்ளே நுழைந்தவுடன் வரவேற்றது உணவுக்கடைகள் தாம். வாடிக்கையாக அனைத்து பொருட்காட்சியிலும் உள்ளதைப் போல் பானி பூரி, ஊட்டி மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், செம்மண் படிந்த இருக்கைகள், சற்றும் பொருந்தாத விலை என எதிலும் மாறுதல் இல்லை.
பதிப்பகங்களின் விளம்பரப் பலகைகளையும், ஊடகங்களின் அலங்கார வளைவுகளையும் கடந்து செல்ல, புத்தகக் காட்சி அரங்கம் காட்சியளித்தது. வாயிலில் கண்காட்சியில் பங்குபெரும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையானர்களின் பெயர்களும் கடை எண்களும் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தின் அனைத்து முன்னனி பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் அங்கு கடை விரித்திருந்தனர்.
சிறுவர் நூல்கள், தமிழ் ஆங்கில கதை, கவிதைப் புத்தகங்கள், நாவல்கள், மாணவர்களுக்கான நூல்கள், அறிவுத்தள நூல்கள் என புத்தகக் காட்சி விரிந்தது. இருட்ட இருட்ட கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது. இதுவும் மதுரையின் வழக்கம் தான். வெயிலைச் சமாளிக்க மக்கள் இரவில் தான் வீட்டைவிட்டு வெளியேறுவர். மதுரையின் களை இரவில் தான் தெரியும்.
கண்காட்சியில் சிறார்களுக்கான பொருட்கள் தான் அதிகம் கவனத்தைக் கவர்வதாக இருந்தது. நூல்கள், சுவர்ப்படங்கள் போக ஒலி-ஒளி சிடிக்கள், ஐ க்யூ பூஸ்டர் போன்றவை குழந்தைகளையும் பெற்றோரையும் வசியம் செய்தன. குழந்தைகளுக்கு ஐ க்யூ சோதனை செய்து தருவதாகக் கூறிய ஒரு கடையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அலைமோதியது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
அடுத்து, மாணவர்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் போட்டி தேர்வுகளை சந்திக்கவிருக்கும் மாணவர்கள். 10, 12ம் வகுப்பு எனத் தொடங்கி ஏ.இ.இ.பி, ஐ.ஐ.டி.ஜே.இ.இ, டி.என்.பி.எஸ்.சி, டி. ஆர்.பி, கேட், சிவில் சர்வீசஸ் என்று புத்தகங்கள் குவிந்திருந்தன.  பல பள்ளிகள் தங்கள் மாணவர்களைக் கூட்டி வந்திருந்தன. அட்லஸ், டிக்‌ஷனரி, வரைபடங்கள், இயர்புக் போன்றவற்றை பள்ளி மாணவர்கள் அதிகம் வாங்கினர். அதேபோல், ஆங்கில நாவல்களை ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் வினவிய பின்னர் அந்நூல்கள் படிப்பதற்கு மட்டும் இல்லை என நன்கு புரிந்தது.
10, 12ம் வகுப்பு மாணவர்களைக் குறிவைத்து பல ஸ்மார்ட் க்ளாஸ் பாணியிலான குறுந்தகடுகள் “பார்த்தால் மட்டும் போதும் முழு மதிப்பெண்” எனும் விளம்பரத்துடன் விற்கப்பட்டன.
பொறியியல், மருத்துவம், மேனேஜ்மெண்ட் போன்ற ஸ்டால்களில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பார்க்கக் கூடாதது எதையோ பார்த்துவிட்டதைப் போல், மாணவர்கள் மிரண்டுபோய் நகர்ந்தனர்.
விகடன், கிழக்கு போன்ற பதிப்பகங்களில் வழக்கம் போல் கூட்டம் இருந்தது. விகடனில் மூங்கில் மூச்சு, மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ், கற்றதும் பெற்றதும் போன்றவற்றை வாசகர்கள் விரும்பி வாங்கினர். கிழக்கில் வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம், தொழில் போன்றவற்றுடன் சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்றோரின் புனைவுகளும் இடம்பெற்றிருந்தது. வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள், மூன்றாம் உலகப் போர் போன்ற புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த முறை சிக்ஸ்த் சென்ஸ், எதிர் வெளியீடு, உயிர்மைப் பதிப்பகம், நக்கீரன் மற்றும் காலச்சுவடு ஆகியவற்றுக்கு அதிக வரவேற்பு இருந்தது. கோபிநாத்தின் முகத்துடன் இருந்த புத்தகங்கள் சிக்ஸ்த் சென்ஸில் தென்பட்டன. எதிர் வெளியீட்டின் ஆனி ஃப்ராங்கின் டைரிக் குறிப்புகள், ஒற்றை வைக்கோல் புரட்சி, ரெட் சன் போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் சிறப்பாக இருந்தன. மனுஷ்யபுத்திரனின் பொது ஊடக விஜயத்துக்குப் பிறகு உயிர்மை மதுரையில் எழுச்சி கண்டதைப் போல் தெரிகிறது. ஆங்காங்கே பேருந்துகளில் எல்லாம் உயிர்மையின் விளம்பரம் தென்படுகிறது. நாங்கள் சென்ற பொழுது உயிர்மை அரங்கில் முத்துகிருஷ்ணன் இருந்தார். மறுநாள் மனுஷ்யபுத்திரன் வருவதாகத் தெரிவித்தார்.
என்.சி.பி.ஹெச், பாரதி புத்தகாலயம் போன்றவற்றில் இளைஞர்களைக் காண முடிந்தது. பாரதி புத்தகாலயத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுவரொட்டிகளுக்கு வரவேற்பு இருந்தது. இவை தவிர பிற பதிப்பகங்களிலும் சே, லெனின், காஸ்ட்ரோ போன்றவர்களைப் பற்றிய புத்தகங்கள் நிறைய இருந்தன.
இந்த முறை ஆன்மீக அரங்குகள் கலர்கலராக இருந்தன. ஓலை வேயப்பட்ட உள்ளரங்குடன் ஈஷா சுண்டி இழுத்தது. மதுரைக்கு புதுவரவான ‘ரா’வின் Infinitheism அரங்கு மிக நேர்த்தியாக காணப்பட்டது. ராமகிருஷ்ண மடம் விவேகானந்தரை முன்னிறுத்தித் தன் அரங்கை அமைத்திருந்தது. கீதா ப்ரஸ் பத்து ரூபாய்க்கு கீதை அளித்தது. சித்த மருத்துவத்தை மட்டும் முன்வைத்து ஒரு புதிய அரங்கம் முளைத்திருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜய பாரதத்தைக் காண முடிந்தது. பல்வேறு ஆங்கில மற்றும் தமிழ் நூல்களுடன் ரஹ்மத் பதிப்பகம் மற்றும் யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் போன்ற இஸ்லாமிய பதிப்பகங்களும் இந்தமுறை களத்தில் இருந்தன.
பிரபல ஆங்கிலப் புத்தகங்கள் பல ஹிக்கின்போதம்ஸ், சந்த் அண்ட் கோ, சர்வோதைய இலக்கியப் பண்ணை போன்ற விற்பனையாளர்களிடத்தில் கிடைத்தது.
பத்து ரூபாய், இருபது ரூபாய், அதிரடி ஆஃபர் என மலிவு விலையில் புத்தகங்களை விற்கும் பல கடைகள் இருந்தன.
இவற்றின் நடுவே டெலஸ்கோப், ஸ்டெதஸ்கோப் போன்ற அறிவியல் சாதனங்களை விற்கும் கடை ஒன்றில் ஆள் நிற்க முடியாத அளவுக்குக் மக்கள் கூட்டம் முட்டி மோதியது.
மேலும், அனிமேஷன், கட்டவியல் போன்ற துறைகளைச் சார்ந்த தனி ஊடகங்கள் அரங்கில் இருந்தன. ஹிமாச்சல் பிரதேசத்து ஆப்பிள் ஜீஸ் எனக் கூறி ஏதோ ஒன்றை கலக்கி ஒரு கடையில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஒன்பது மணிக்கு சரியாக ஒலிப்பெருக்கியில் “இன்றைய தினம் பொருட்காட்சி முடிகிறது. மீண்டும் நாளைக் காலை சந்திப்போம்” எனக் குரல் ஒலித்தது. கூட்டம் கலையாததால் ஒரு செக்யூரிட்டி வந்து அனைவரையும் விரட்டினார். அடுத்த கால் மணி நேரத்தில் தமுக்கத்தின் முதன்மை வாயில் மூடப்பட்டது. அடித்துப் பிடித்து வெளியேறினோம்.
கடந்த முறையை விட இந்த முறை புத்தகக்காட்சி பல வகையிலும் சிறப்பாக அமைத்திருந்தது. தி ஹிந்து செய்திக்குறிப்பு இங்கே. ஆகஸ்ட் 30 தொடங்கிய மதுரை புத்தகக் கண்காட்சி செப்டெம்பர் 09 அன்று முடிவடைகிறது.
0
பாபா பகுர்தீன்

கருத்துகள் இல்லை: