புதன், 5 செப்டம்பர், 2012

கே.எஸ்.ஆர்.தாஸ்...! சாதனை கலைஞனை மறந்த சினிமா

Director K.S.R.Dass special story
1970 முதல் 1980 வரையிலான காலட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர். உலகில் 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்கள் பத்துக்கும் குறைவானவர்கள்தான். நம் நாட்டில் தமிழ் நாட்டை சேர்ந்த ராம நாராயணன், கே.பாலச்சந்தர், தெலுங்கில் தாசரி நாராயணராவ் இந்த பட்டியலுக்குள் வருகிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருந்தவர் கே.எஸ்.ஆர் தாஸ்.
 99 படங்களை இயக்கியவர். கடந்த ஜுன் மாதம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். சென்னை மகாலிங்கபுரத்தில் எளிமையாக தனது கடைசி காலத்தை கழித்த கே.எஸ்.ஆர் தாஸின் இறுதி சடங்குகளும் எளிமையாகவே நடந்தது. உறவினர்களைத் தவிர சினிமா உலகில் இருந்து ஒரு லைட்மேன்கூட கலந்து கொள்ளவில்லை. ஒரு மாபெரும் சாதனை கலைஞனுக்கு சினிமா தந்த மரியாதை இவ்வளவுதான்.
அதனால்தான் தினமலர் இணையதளம் தனது வாசகர்களுக்கு கே.எஸ்.ஆர்.தாஸ் பற்றிய நினைவுகளை தருகிறது.

1936ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் தாஸ். காந்தாராவுடன் பல ஆண்டுகாலம் பணியாற்றி சினிமா திறமையை வளர்த்துக் கொண்டார். புராண படங்களின் பக்கமே திரிந்து கொண்டிருந்த தெலுங்கு சினிமாவை கமர்ஷியலுக்குள் கொண்டு வந்தவர் தாஸ். 1966ம் ஆண்டு லொகுட்டு பெருமுள்ளுகேர்னுகா என்ற படத்தின் மூலம் தனது சினிமா கணக்கை துவக்கினர். 1969ம் ஆண்டு அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடிக்க இவர் இயக்கிய தக்கரி தொங்கா சக்கரி சுங்கா என்ற படம்தான் தாஸை திரும்பி பார்க்க வைத்தது. பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமான இது பெரும்பாலான இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு கலெக்ஷனை அள்ளியது.

விருதுக்காக படம் எடுக்கிறேன். சமுதாயத்தை திருத்த போகிறேன். மெசேஜ் சொல்கிறேன் என்கிற வேலையெல்லாம் தாஸிடம் கிடையாது. பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை இரண்டறை மணிநேரம் மகிழ்ச்சியுறச் செய்து அனுப்ப வேண்டும், பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இதை அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

1980களில் தமிழ் சினிமா காதலில் மூழ்கி கிடந்தபோது தெலுங்கிலிருந்து அதிரடி ஆக்ஷன் படங்களை அனுப்பியவர் தாஸ். இயக்கம் கே.எஸ்.ஆர் தாஸ் என்றாலே டப்பிங் பட உலகில் கண்ணை மூடிக் கொண்டு படத்தை வாங்குவார்கள். தமிழகத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் தாஸின் பெயர் தெரியும். தமிழில் ஜெய்சங்கர் நடித்த பல ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களுக்கும், கர்ணன் இயக்கிய கவ்பாய் பாணி படங்களுக்கும் வாத்தியார் இவர்தான். ரவுடி ராணி, ஜேம்ஸ் பாண்ட் 007, சி.ஜ.டி ராணி, கன்பைட்டர் ஜானி, பெண்ணின் சவால், பில்லா ரங்கா, இப்படித்தான் இருக்கும் தாஸின் படங்கள். 2000மாவது ஆண்டில் அவர் இயக்கிய நகுபம்மாதான் கடைசி படம். தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படம் இயக்கிய தாஸ். தமிழில் படம் இயக்கவில்லை. ஆனால் ரஜினி நடிப்பில் இதாரு ஆசாத்தியாலு, ஆனந்தமுல்ல சவால் என்ற இரு தெலுங்கு படங்களை இயக்கினார். என்.டி.ராமராவ், சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன், மோகன்பாபு என எல்லா சூப்பர் ஸ்டார்களையும் இயக்கினார்.

99 படங்களை இயக்கிய தாஸ்க்கு 100 வது படத்தை இயக்கி சென்ஞ்சுரி அடிக்க வேண்டும் என்ற கனவு மட்டும் நிறைவேறாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சாதனையாளனின் மறைவு சாதாரண நிகழ்வாகவே கடந்து போய்விட்டது. இத்தனைக்கும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் முதல் உறுப்பினர் அவர். தாஸின் மரணத்தை மறந்தது இருக்கட்டும் அவரை நினைவூட்ட வேண்டிய கடமை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்கு இருக்கிறது.

கருத்துகள் இல்லை: