சனி, 8 செப்டம்பர், 2012

மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டே அள்ளி அகற்றுவதை

 http://gnani.net/
இந்தியாவில் ஒரு மனிதன் தன் சக மனிதனை இழிவுபடுத்தப் பயன்படுத்தும் உச்சமான கருவி அவனுடைய மலம்தான். தன் மலத்தை அகற்றச் சொல்வது முதல் வாயில் திணிப்பது வரை மனிதக் கழிவு ஓர் ஒடுக்கும் கருவியாக இழிவுச் செயலாகப் பயன்படுத்தப்படுகிறது. வாயில் திணிப்பது சட்ட விரோதம். ஆனால் மலம் அள்ளுவது இன்று வரை சட்டப்படி சரியான செயலாகவே இருந்துவருகிறது.
நாடு முழுவதும் மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டே அள்ளி அகற்றுவதை நிறுத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் பல காலமாகப் போராடி வருகிறார்கள். நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன என்று வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்திலிருந்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்னும் இரு மாதங்களுக்குள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசின் மிக உயர் பதவிகளில் இருப்பவர்களை நேரில் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரித்தது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கு பதில் மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா ? அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டது !

ஓராண்டு காலமாக அங்கே வழக்கு நடக்கிறது. மனிதர்கள் மலம் அள்ளும் பணியை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பல முறை அரசு சொல்லியும் எதுவும் நடக்கவில்லை என்று நீதிபதிகள் அரசின் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரலைக் கண்டித்தனர்.
ஒருவழியாக ஆகஸ்ட் 24 அன்று நீதிமன்றத்தில் அரசு வக்கீல் இதற்கான சட்ட மசோதா தயாராக இருப்பதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
மனிதக் கழிவை அகற்றத் துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க தடை விதித்தும்
ஏற்கனவே இதில் ஈடுபட்டிருப்போருக்கு மறுவாழ்வு தரவும் வகை செய்யும் இந்த மசோதாவின்படி, மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், கழிவுச் சாக்கடைகளில் இறங்கி சுத்தப்படுத்தல் முதலியவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்குக் கடும் தண்டனை வழங்கப்படும். இரு வருடம் சிறைவாசம் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் இதே குற்றத்தை செய்தால் ஐந்து வருட சிறை ; ஐந்து லட்சம் அபராதம். சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்பது மாதங்களுக்குள் நாடு முழுவதும் மனிதர்கள் மலம் அள்ளும் வடிவிலான கழிப்பறைகள் எங்கிருந்தாலும் அகற்றப்பட்டுவிடவேண்டும். மாற்று கழிப்பிடங்களைக் கட்ட மொத்தம் 4825 கோடி ரூபாய் செலவாகும் என்று அரசு மதிப்பிட்டிருக்கிறது. மலம் அள்ளும் வேலையில் இருப்போர் எல்லாரும் அந்த வேலையிலிருந்து ஒரு வருடத்துக்குள் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து எந்த கோர்ட்டுக்கும் செல்லமுடியாது. சட்டம் செயலாக்கப்படுவதை தேசிய துப்புரவு தொழிலாளருக்கான ஆணையம் கண்காணிக்கும். செயல்படுத்தும் பொறுப்பு மாவட்ட கலெக்டர்களுடையது. கடமை தவறினால் அவர்களுக்கும் தண்டனை உண்டு.
மலம் அள்ளும் வேலையிலிருந்து மீட்கப்படும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு, குடும்பத்தினருக்கு கல்வி சலுகை, பண உதவி, மாற்றுத்தொழில் கற்பதற்கான பயிற்சி முதலியவற்றை வழங்கவும் சட்ட மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மசோதாவுக்கு ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.
எல்லாம் சரி. இந்த சட்ட மசோதாவை எப்போது பார்லிமெண்ட்டில் வைத்து நிறைவேற்றப் போகிறீர்கள் என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அரசு வக்கீலை ஆகஸ்ட் 24 அன்று கேட்டார்கள். நடப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 7 அன்று முடிகிறது. அன்றைக்கு நிலை என்ன என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன் என்று வக்கீல் சொன்னார்.
செப்டம்பர் 7 அன்று கூட்டத்தொடர் முடியும் முன்பு அவையில் இந்த மசோதா வைக்கப்படுமா என்பது நிச்சயமில்லை. ஏனென்றால், மன்மோகன்சிங் ராஜினாமா செய்யும்வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று பி.ஜே.பி போராட்டம் நடத்தி வருகிறது. இந்தியாவுக்கே பெருத்த அவமானமாக விளங்கும் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கேவலத்தை ஒழிக்க வரும் இந்த சட்டத்தை அவையில் வைப்பதற்காகவேனும் பி.ஜே.பி தன் போராட்டத்தை விலக்கிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இது சட்டமாவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும்.
கழிவு 2:
வளர்ச்சி என்ற பெயரில், தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்காக மனிதன் செயற்கையாக உற்பத்தி செய்யும் கழிவுதான் அணுக்கழிவு.
இந்தியாவில் இந்த அணுக் கழிவுகளின் நிலை என்ன என்பது மர்மமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்குப் பிறகு வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணுசக்தித் துறை நீதிமன்றங்கள் முன்னால் வந்து பதில் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அங்கேயும் இன்னமும் அணுக்கழிவுகள் பற்றிய விவரங்கள் தரப்படவில்லை.
அதன் அணு உலைகள் செயல்படும் விதம் பற்றி மெல்ல மெல்ல பல விஷயங்கள் அம்பலமாகி வருகின்றன. ராஜஸ்தானில் இருக்கும் ரவாட்பட்டா அணு உலையில் இரு மாதங்கள் முன்பு கதிரியக்கமுள்ள வாயுவான ட்ரிட்டியம் கசிவு ஏற்பட்டது. மொத்தம் 38 ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த அளவுக்குக் கதிர்வீச்சு ஏற்பட்டது என்ற மெடிக்கல் ரிப்போர்ட்டைத் தராமல் நிர்வாகம் டபாய்த்துவருகிறது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு போட்டு விவரங்களைக் கோரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
உலையில் இருக்கும் கம்யூட்டரில் பார்த்து தங்களுக்கு எவ்வளவு கதிர்வீச்சு ஏற்பட்டது என்பதை ஊழியர்கள் அறியமுடியாதபடி கசிவு ஏற்பட்ட மறு நாளிலிருந்து கம்ப்யூட்டரின் சாப்ட்வேர் வேலை செய்யவில்லை!
கசிவு ஏற்பட்டதும் அரை மணி நேரம்தான் அந்த இடத்தில் அதிகபட்சம் ஊழியர்கள் இருக்கலாம் என்பது விதி. ஆனால் ஐந்து மணி நேரம் அங்கே அவர்கள் வேலை வாங்கப்பட்டதில் அவர்கள் மீதான கதிர் வீச்சு அதிகமாகிவிட்டது. மிக அதிக கதிர் வீச்சை பெற்ற நந்த் கிஷோர் என்ற ஊழியரை ஒரு மாதம் கழித்து இன்னொரு கசிவு இடத்தில் பழுது பார்க்க அனுப்பியது நிர்வாகம். அவர் மறுத்துவிட்டார். இந்த இரண்டாம் கசிவு பற்றி இதுவரை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்குள் நான்கு முறை டிரிட்டியக் கசிவு இங்கே ஏற்பட்டிருக்கிறது.
கழிவானாலும் கசிவானாலும், அணு உலைகள் இயங்கும் விதத்தை மேற்பார்வையிட்டு கண்காணித்து ஒழுங்கு செய்யவேண்டிய பொறுப்பு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியத்துடையதாகும். ஆனால் இந்த வாரியமே ஒரு டுபாக்கூர் என்று இப்போது மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து தெரியவந்திருக்கிறது.
ஆகஸ்ட் 22 அன்று நாடாளுமன்றம் முன்பு வைக்கப்பட்ட கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி, அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம் முப்பதாண்டுகள் ஆகியும் கூட அணுசக்தி, கதிரியக்கம் பற்றிய கொள்கையை வரையறுத்து வகுக்கவே இல்லை. இரண்டு கமிட்டிகள் பரிந்துரைத்தும் கூட , உலை பாதுகாப்புக்கான 27 ஆவணங்கள் இன்னமும் உருவாக்கப்படவே இல்லையாம். அணு உலையை மூடவேண்டி வரும்போது என்ன செய்யவேண்டும் என்ற செயல்திட்டமே வாரியத்திடம் இல்லை.
ஓர் அணு உலையில் கதிரியக்கம் எந்த அளவு இருக்கிறது, கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பைக் கூட வாரியம் செய்வதில்லை. அந்த உலையை நடத்தும் நிர்வாகத்திடமே அந்த வேலையை வாரியம் விட்டுவிடுகிறது. அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறது.
அணு உலைகள் மட்டுமல்ல, மருத்துவ துறையில் சோதனைக்கூடங்களில் அணுப்பொருட்கள் பயன்படுத்துவதைப் பற்றி கூட வாரியத்தின் கட்டுப்பாடு சரியாக இல்லை. நாடு முழுவதும் எங்கெல்லாம் கதிரியக்கம் உடைய பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்பது பற்றிய பட்டியலே வாரியத்திடம் கிடையாது. உரிய அனுமதி பெறாமலே நிறைய எக்ஸ் ரே நிலையங்கள் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் கதிரியக்கப் பாதுகாப்புக்கான இயக்குநரகத்தை தொடங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, வாரியம் இதை செய்யவில்லை. இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டுமே அவை உள்ளன.
அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம் என்பது சுயேச்சையான அமைப்பாக இல்லாமல், உலைகளை நடத்தும் அரசின் இன்னொரு பிரிவாகவும், சொன்ன இடத்தில் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை போட்டு சர்ட்டிபிகேட் வழங்கும் ஆபீசாகவும் மட்டுமே இயங்கிவருகிறது.
வாரியம் அணுசக்தி துறையின் பிரிவாக இல்லாமல், சுயேச்சையாக இருக்கவேண்டும் என்று அதன் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து சொல்லி வருகிறார். மூன்று முறை இது பற்றி இவர் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு எழுதியும் பதில் இல்லை.இந்த வாரியம்தான் கூடங்குளத்தில் எல்லாம் பத்திரமாக இருக்கிறது. அணு எரிபொருளை நிரப்பலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்திய அரசியலை கடந்த சில வருடங்களக உலுக்கி எடுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தியவர் கணக்குத்தணிக்கை அதிகாரி. இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருப்பதும் அவர்தான். அதே அதிகாரிதான் ஊழல்களை விட மிகப்பெரிய ஆபத்தான அணு உலைப் பிரச்சினையில் கண்காணிப்பு வாரியத்தின் ஓட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் இதைப்பற்றி பி.ஜே.பி முதல் இடதுசாரிகள் வரை எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவே இல்லை. தேர்தல் அரசியலுக்கு உதவக்கூடிய விஷயங்களை தணிக்கை அதிகாரி சொன்னால் இனிக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக சொன்னால் கண்டுகொள்வதில்லை. இவர்களெல்லாம் அரசியல் கட்சிகள் அல்ல. அரசியல் கழிவுகள்.

கருத்துகள் இல்லை: