வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அமைச்சர் ஜெகத்ரட்சகன் பதவியும் கோவிந்தா ????

தி.மு.க.-வின் அதி பணக்கார அமைச்சர் நிலக்கரி முறைகேடு விவகாரத்தில்! தி.மு.க. திடுக்!!தி.மு.க. ஏற்கனவே ஒரு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டது.
  அதுவே இன்னமும் முடியவில்லை. இப்போது, நாட்டை உலுக்கி வருமம் நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பதவியும் கோவிந்தா ஆகிவிடும் போலுள்ளது.
தி.மு.க. ஏற்கனவே இரு மத்திய அமைச்சு பதவிகளை (ஆ.ராசா, தயாநிதி மாறன்) பறிகொடுத்துள்ளது. மற்றொரு எம்.பி.-யை (கனிமொழி) ஜெயிலுக்கு அனுப்பி, பெயிலில் எடுத்து வெளியே உலாவ விட்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெகத்ரட்சகனின் பதவியும் பறிக்கப்பட்டால், தி.மு.க. தலையில் கை வைத்து உட்கார்ந்து விடும்.

ஒருவேளை ஜெகத்ரட்சகன் கைது செய்யப்பட்டால், தி.மு.க. பாய் விரித்து படுத்தே விடும்.
தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் நடத்திய கம்பெனியும், நிலக்கரி உரிமம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாக எழுந்திருக்கும் புகாரை அடுத்தே அவரது பதவிக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா, தயாநிதிக்கு நடந்தது போல, இவருடைய பதவியையும் காலி செய்ய பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க. களம் இறங்கும் என தெரியவருகிறது.
தி.மு.க.-வை சேர்ந்த ஜெகத்ரட்சகன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துணை இணை அமைச்சராக உள்ளார்.
தி.மு.க.-வை பொறுத்தவரை ஒரு காலத்தில், பெருமைக்குரிய விஷயமாக இருந்தவை, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’, ‘மிக அதிக மக்கள் செல்வாக்கை வைத்திருப்பவர்’ என்று இருந்தது. அது ஒரு அழகிய நிலாக்காலம். இப்போதெல்லாம், தி.மு.க.-வில் பெருமைக்குரிய விஷயமே, ‘மிகப் பெரிய பணக்காரர்’ என்பதுதான்!
அந்த வகையில் பார்த்தால், தி.மு.க.-வில் தற்போது உள்ளவர்களில், மிக ‘பெரிய பணக்கார அமைச்சர்’ என்ற தி.மு.க.-வுக்கே உரித்தான பெருமையும் பெருமையும் ஜெகத்ரட்சகனுக்கு உண்டு.
இவர் ஜே.ஆர். பவர் ஜென் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை நடத்தி வந்துள்ளார். அதன் இயக்குனர்கள், இவரும், இவரது குடும்பத்தினரும்தான். மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, குஜராத் அரசுக்கும், புதுவை அரசுக்கும் சேர்த்து ஒரே இடமாக ஒடிஸ்ஸா மாநிலம் நைமி என்ற இடத்தில், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்தது.
புதுவை மாநில அரசு தமக்கு கிடைத்த ஒதுக்கீட்டை, நம்ம பணக்கார அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்தது.
புதுவை அரசின் தொழில் முனையமான பிப்டிக், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஜே.ஆர். பவர் ஜென் நிறுவனத்துடன் 17.01.2007-ம் தேதி, நிலக்கரி சுரங்கத்தை கொடுப்பதாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.
“அதிலென்ன தவறு? ஒருவேளை நம்ம அமைச்சரின் நிறுவனம்தான், நிலக்கரி விஷயத்தில் கில்லாடியான நிறுவனமாக இருந்தால், அவர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு?”
இப்படி நீங்கள் கேட்பீர்கள் என்று தெரிந்திருந்தால், மற்றொரு விஷயத்தையும் சொல்லியிருப்போம். அந்த விஷயம் என்னவென்றால், ஜெகத்ரட்சகன் தனது நிறுவனத்தை துவங்கிய 5-வது நாளில், புதுவை அரசின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஜே.ஆர். பவர் ஜென் நிறுவனம், தமது 51 சதவீத பங்குகளை, ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.எஸ்.கே. எனர்ஜி வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்றது. இதையடுத்து நிலக்கரி சுரங்கத்தை பயன்படுத்தும் உரிமை ஹைதராபாத் நிறுவனத்திற்கு சென்றது.
பணம் கொழிக்கும் தங்கச் சுரங்கம் போன்ற இந்த வியாபாரத்தை, சும்மா யாராவது விற்பார்களா? நல்ல பண லாபத்துடன்தான் நிறுவனம் கைமாறியது.
இப்போது விவகாரம் வீதிக்கு வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: