வியாழன், 18 ஆகஸ்ட், 2011

Vijayakanth ஒரு ஹீரோ ஜீரோவாகிறான் கேப்டனின் கொடநாட்டில்

 
''தேர்தல் முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்ட பிறகு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு முதல்வராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் உட்காருவார்கள். அவருக்கு எதிர் வரிசையில் மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவராக புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் அமர்வார்கள்!'' என்று கோவையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னார். அவர் சொன்னதுதான் நடந்தது. ஜெயலலிதா, முதல்வர் ஆனார். விஜயகாந்த், எதிர்க் கட்சித் தலைவர் ஆனார். முதல்வர் செயல்படுகிறார். ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் செயல்படுகிறாரா? இதுதான் இன்றைய அரசியலின் பிரதானக் கேள்வி!

கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது, போயஸ் கார்டனில், சிறுதாவூரில், கொடநாட்டில் ஜெயலலிதா நிம்மதியாகப் பதுங்கிக்கொண்ட ரோலை இப்போது விஜயகாந்த் கைப்பற்றிவிட்டதாகவே தெரிகிறது. எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், அது முதலமைச்சருக்கு இணை யான பொறுப்பு. சபையில் யார் பேசும் போதும் முதல்வர் குறுக்கிடலாம். முதல்வர் எழுந்தால், பேசிக்கொண்டு இருப்பவர் உடனடியாக உட்கார வேண்டும். அதைப் போலத்தான் எதிர்க் கட்சித் தலைவரும் யார் பேசும்போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால், மற்றவர்கள் உட்கார்ந்து விடுவார்கள். இன்னும் சொன்னால், முதல்வர் பேசும்போதும் தயக்கம் இல்லா மல் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்கக்கூடிய அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு. அவ்வளவு அதிகாரம் பொருந்திய பதவியை விஜயகாந்த் 'சும்மா’ வைத்திருப் பதன் சூட்சுமம் என்ன?

சட்டசபையில் மிக முக்கியமான நிகழ்வு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது. அன்றைய தினம் விஜயகாந்த் சபைக்கே வரவில்லை. அடுத்தடுத்த நாட்கள் நடந்த விவாதங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவர் பேசியே ஆக வேண்டிய அன்று மட்டும் விஜயகாந்த் வந்தார். அன்றும் 'அம்மா’வை விமர்சிக்கவில்லை. பொதுவாகவே, எப்போதும் இலவசங்களை விஜயகாந்த் எதிர்ப்பார். கடந்த ஆட்சியில் கருணாநிதியைக் காய்ச்சி எடுத்ததே இலவசங்களை வைத்துத்தான். 'அரிசி ரெண்டு ரூபாய்க்குக் கொடுத்தா போதுமா? கொழம்புவைக்க இருபத்தஞ்சு ரூபா வேணுமே’ என்று விஜயகாந்த் கேட்ட கேள்விதான் தீயாகப் பரவியது. அதை மறந்துவிட்டு, இப்போது விஜயகாந்த் சொல்வதை வாசியுங்கள்...

''2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்... ஏழை, நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், இலவச அரிசி, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, கறவை மாடுகள், ஆடுகள், லேப்டாப் கம்ப்யூட்டர், வேட்டி, சேலை என சுமார் 50 இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லை என்று கூறுவோர், கண் இருந்தும் பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்கள் ஆவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழியில் கூற வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த பட்ஜெட்டைப் பாராட்டி மகிழலாம். அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன'' என்று விஜயகாந்த் சொல்லச் சொல்ல... பூரிப்பில் முகம் மலர்ந்து கொண்டே இருந்தார் முதல்வர் ஜெயலலிதா!

ஜெ. முதல்வரானதும் ஏற்பட்ட முதலாவதும் பெரியதுமான சறுக்கல் சமச்சீர்க் கல்வி விஷயத்தில் நடந்தது. ஜூன் 4-ம் தேதி இந்த ஆண்டுக்கான படிப்பைத் தொடங்கி இருக்க வேண்டிய பிள்ளைகள், ஆகஸ்ட் 9 வரை என்ன படிப்பது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் கொந்தளித்தன. அ.தி.மு.க. கூட்டணியில் அசைக்க முடியாத வகையில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போராட்டத்தைத் தயக்கம் இல்லாமல் முன்னெடுத்தது. ஆனால், அப்போதும் விஜயகாந்த் மௌனமாகவே இருந்தார். கேப்டன் டி.வி-யின் மெயிலில் மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில்கூட, 'நாங்கள் கேட்டது குதிரை. கருணாநிதி தந்தது கழுதை.’ என்று மையமாகப் பதில் சொன்னார். சமச்சீர்க் கல்வியை அவர் ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது அந்தப் பதிலில்.

இப்போதுகூட சட்டசபையில் அவர் பேசும்போது, ''சமச்சீர்க் கல்வி என்ற பெயரால் கடந்த தி.மு.க. ஆட்சியில் பொதுப் பாடத் திட்டம் மட்டுமே கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தக் காலகட்டத்தில் வரவேற்கக்கூடியது என்றாலும், அது உண்மையில் சமச்சீர்க் கல்வி கிடைக்க வழி வகுக்குமா என்பதே என் கேள்வி'' என்று கேட்டது... சுற்றி வளைத்து எந்த முடிவுக்குமே வர முடியாத வார்த்தைகளின் கோவையாக அமைந்துவிட்டது.

இயல்பில் விஜயகாந்த், வெள்ளந்தியாகப் பேசக் கூடியவர். அடுக்கு மொழியோ, அலங்கார வார்த்தைகளோ இல்லாமல், மனதில் பட்டதை அப்படியே சொல்லக் கூடியவர். ''என்னை மாதிரிதான் மற்ற கட்சிகளும் பேசணும். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனு பேசணும். அவங்களைத்தான் மக்கள் நம்புவாங்க. நான் தயவு தாட்சண்யம் பார்க்காம, நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்காம, மக்களுக்கு இன்னிக்கு என்ன தேவையோ, அதைப்பத்தி நான் மட்டும்தான் பேசுறேன். எனக்கு எந்தப் பயமும் இல்லை'' என்று சொல்லிக்கொண்ட விஜயகாந்த், இன்று அளவுக்கு மேல் அடக்கி வாசிப்பதற்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல்!

''உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்போது கேப்டன் செயல்படுகிறார். அது வரை இந்தக் கூட்டணியில் எந்தச் சிக்கலோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார். இன்றைக்கு அ.தி.மு.க-வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி மிக மனப்பூர்வமாக அமைக்கப்பட்டது. அந்த முடிவை எடுப்பதற்கு முன்னால், மிகத் தீவிரமாக தீராத யோசனைகளில் கேப்டன் ஆழ்ந்து இருந்தார். பல்வேறு சாதக பாதகங்களை அலசிய பிறகுதான், கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு, கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கோபக் கொந்தளிப்பு காட்டியபோதுகூட, கேப்டன் அமைதியாகத்தான் இருந்தார்.

'ஒரு கூட்டணிக்குள் போயாச்சு. கேட்ட தொகுதி கிடைக்கலைனு சொல்லிட்டு வெளியே வந்தால், சில்லியா இருக்கும். அவங்ககிட்ட நம்ம கோரிக்கையை வைப் போம்’னு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் சாந்தமாகப் பதில் சொன்னார்.

'விஜயகாந்த் வேகமா இருப்பார்னு பார்த்தா, நம்மைவிட பக்குவமா இருக்காரே!’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர் கமென்ட் அடித்துவிட்டுப் போனார். அதை அடக்கம் என்று சொல்ல முடியாது. கூட்டணி தர்மம், கட்டுப்பாடு என்று சொல்லலாம். இப்போதும் தேவை இல்லாமல் கேப்டன் எந்த கமென்ட்டும் அடிப்பது இல்லை.
''இன்றைக்கு 29 பேர்தான் எம்.எல்.ஏ-க் களாக ஆகி இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக கேப்டனுக்காக ரசிகர் மன்றம் நடத்தி எதையும் அனுபவிக்காத எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சி தொடங்கி, கைக் காசைப்போட்டு இன்று வரை கட்சியை வளர்த்து வரும் நிர்வாகிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் சின்னப் பதவிகளாவது வாங்கித் தர வேண்டும் என்று விஜயகாந்த் துடிக்கிறார். தேவை இல்லாமல் கூட்டணியில் குழப்பம் செய்து வெளியே வந்தால், என்ன ஆகப்போகிறது? எனவேதான் பயம் என்று சொல்கிறார்கள் சிலர். பிளான் என்கிறார்கள் சிலர். எதுவாக இருந்தாலும் விஜயகாந்த்துக்கு நன்மைதான்'' என்றும் அவரது மனம் அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.

ஆக்ஷன் ஹீரோ திடீரெனக் குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடித்தால் போரடிக்கும் அல்லவா? அப்படித்தான் இருக்கிறது விஜயகாந்த்தின் நடவடிக்கைகள்.
'எப்பவுமே அடிதடியில நடிச்சிட்டே இருந்தா... எனக்கும் போரடிக்காதா?’ என்று விஜயகாந்த் சொல்வார்.
K Ramasamy
விஜயகாந்த் ஆக்க பூர்வமான கருத்துகளை சொல்லி இருக்க வேண்டும். சமச்சீர் கல்வியில் அதிமுக அரசு தவறு இழைத்து விட்டது. இவர் முதல்வர் மீது மரியாதையாக இருந்தாலும், யார் மீது தவறோ அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்க வேண்டும். தவறு கல்வி செயலர் ஐஏஎஸ், கல்வி அமைச்சர் சண்முகம் மற்றும் அரசு வக்கீல் நவ நீத கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருக்க வேண்டும்.

இவர் பேசாமல் இருப்பது, இவருக்கு மக்கள் செல்வாக்கை குறைக்கும். மக்கள் 2011 ல் சாதி பார்ப்பதில்லை (பாமக, கொமுக, விசி எல்லாம் தோல்வி), கூட்டணி பலம் பார்ப்பதில்லை (திமுக கூட்டணி பலமானது). மக்கள் எதிர்பார்ப்பது வேறு., இவர் ஜெயலலிதா கூட்டணிக்கு காத்திருந்தால், இவரை மக்கள் மதிக்க மாட்டார்கள்

கருத்துகள் இல்லை: