வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ரூ.2,270 கோடியில் இலங்கையில் துறைமுகம் அமைக்கிறது சீனா

கொழும்பு, ஆக.17: ரூ.2,270 கோடி செலவில் இலங்கையில் பெரிய அளவிலான துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை இலங்கை நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் சீனாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச சென்றுவந்தார். அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளது: இலங்கையில், சீனா சமீபத்தில் செய்துள்ள மிகப்பெரிய முதலீடாகும் இது. பெரிய அளவிலான கண்டெய்னர்கள் கையாளப்படும் வகையில் இந்த துறைமுகம் அமைக்கப்படும். துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின் சீனா மெர்ச்சண்ட் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், 30 சதவீத பங்குகள் இலங்கையின் அய்ட்கென் ஸ்பென்ஸ் ஹோல்டிங் நிறுவனம், 15 சதவீத பங்குகள் இலங்கை துறைமுக ஆணையத்திடமும் இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்படும். துறைமுகத்தில் முதல் கட்டப்பணிகள் 2013-ல் நிறைவடையும். ஏற்கெனவே சீனா ரூ.6,810 கோடி முதலீட்டில் ராஜபட்சவின் தொகுதியான அம்பனத்தோட்டத்தில் மிகப்பெரிய அளவிலான துறைமுகத்தை கட்டி வருகிறது. சீனாவைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களான சீனா ஹார்பர், சினோ ஹைட்ரோ ஆகியவை இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய வசதியாக தனது வெளியுறவுக் கொள்கையை இலங்கை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: