வியாழன், 18 ஆகஸ்ட், 2011

உகண்டா பாலா’ விமான நிலையத்தில் கைது மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது

uganda palan
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலையத்தில் மடக்கி பிடிப்பு
சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாலா அல்லது ‘உகண்டா பாலா’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து வருகைதந்த சந்தேகநபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

முல்லைத்தீவின் தெற்கு பிரதேசத்திலுள்ள மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டவர் என்று இரகசிய பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மலேசியாவில் தலைமறைவாகியிருந்த இவரை மலேசிய அரசாங்கம் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

நாடுகடத்தப்பட்ட உகண்டா பாலா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக மீண்டும் இலங்கைவர முற்பட்டபோதே சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.
வெள்ளவத்தை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த இவரை ஆட்களை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக அனுப்புதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சி.ஐ.டி.யினர் இவரை தேடி வலைவிரித்து வந்துள்ளனர்.
ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விடயத்தில் முன்னணி விமானசேவை ஒன்றில் கடமைபுரியும் இரு ஊழியர்களுடன் இணைந்து இவர் செயற்பட்டுவந்துள்ளார். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதிலும் பாலா சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் சி.ஐ.டி.யினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பாலாவிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் எவரும் இருப்பின் 011-2422176 அல்லது 011-2392917 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு-01 என்ற முகவருக்கோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
.

கருத்துகள் இல்லை: