புதன், 17 ஆகஸ்ட், 2011

புலிகள் தான் எதிரானவர்கள், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம்

புலிகள் தான் எதிரானவர்கள், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம்

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் சென்னை போலீஸ் டி.ஜி.பி.யிடம், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார். மனுவை கையளித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், "தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களை இழிவுபடுத்தியும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தோம். சீமான் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று கூறிவருகிறார்கள்.

இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். உடனடியாக அவர்களை தூக்கிலிடவேண்டும். நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட தீர்ப்பை பொதுக்கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம்.

இது பற்றி பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதில் அளித்தார். சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். இதே போக்கு நீடித்தால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம்.

அதே நேரத்தில் எங்களுக்கு விடுதலை புலிகள் தான் எதிரானவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை குற்றவாளியாக பார்க்கவேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளை இதில் சேர்க்கவேண்டாம். சீமான் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக அடுத்தகட்டமாக தகுந்த பதில் அடி கொடுப்போம். இளைஞர் காங்கிரசை பொறுத்தவரை அமைதியாக இருக்கமாட்டோம்" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: