வெள்ளி, 28 ஜூலை, 2017

அந்த குட்டி ஆட்டு கண்களில் இருந்து என்னால அவ்வளவு எளிதில் மீண்டு வரமுடியவில்லை

வாசுகி பாஸ்கர் ஆடு, மாடு, கோழியை கொன்று உண்கிற போது, உண்மையிலேயே உங்களுக்கு அந்த உயிர் உங்க உணவுக்காகவே படைப்பட்டது ன்னு நினைக்கிறீங்களா? அந்த உயிர் மேல உங்களுக்கு அன்பு இல்லையா? - என் நண்பர் கேட்ட கேள்வியும், அவருடன் நடந்த ஒரு விவாதம்.
ஈசிஆரில் ஒரு தாபா உணவகம் உண்டு, இரவு ஒரு ஒன்பது மணி வாக்கில் தாபாவுக்கு போய் சில ரொட்டிகளை ஆர்டர் செய்து விட்டு தொட்டுக்கொள்ள சுக்காவும், சிக்கன் கிரேவியும் சொல்லிட்டு, அந்த தாபாவில் ஆடு, கோழி, வாத்து வளர்ப்பு இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். லேசான மழை, மழைக்காக ஆடுகள் எல்லாம் ஒரே இடத்தில் ஒதுங்க, ஒன்றின் மேல் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருந்தது, ஒரே ஒரு குட்டி ஆடு மட்டும் தனியாக அமர்ந்திருந்தது, அதன் அம்மா ஆடு மழையில் நனைந்த படி ஓடிவர, இந்த குட்டி ஆடு ரெண்டடி முன்னால் போய் அம்மாவை வரவேற்று அந்த அம்மா ஆடு அமர்ந்ததும், அதன் பக்கத்திலேயே குளிருக்கு அடக்கமாக அணைத்துபடி புதைந்து அமர்ந்தது.
இதை பார்த்துட்டு இருந்த கொஞ்ச நேரத்தில என்னவோ மாதிரி ஆகிடிச்சி, இறைச்சியை சாப்பிடுறதை விட்டுடலாமா ன்னு கூட அந்த நேரத்தில தோணுச்சு, அந்த குட்டி ஆட்டு கண்களில் இருந்து என்னால அவ்வளவு எளிதில் மீண்டு வரமுடியவில்லை. உணவு தயாராகி விட்டதாக வெய்ட்டர் வந்து சொல்ல, போய் சாப்பிட அமர்ந்தோம்.
வெறும் ரெய்தா வை ரொட்டிக்கு வைத்து பசிக்கு சாப்பிட்டு, கிரேவிகளை தொடாமல் பில் செட்டில் பண்ணிட்டு கிளம்பினேன், "கிரேவியில் என்ன பிரச்சனை?" என்று மேனேஜர் வந்து அது தொடப்படாமல் இருப்பதை பார்த்து கேட்டார், வயிறு சரியில்லை ன்னு சொல்லிட்டு நேரமானதால் அங்கிருந்து வெளியேறினேன்.
மனிதன் எமோஷன்களின் குவியல், மனிதனின் ஆகச்சிறந்த பிரச்னையும் இது தான், ஆகச்சிறந்த கொண்டாட்ட குணமும் இது தான். "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" ன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவன் எவ்ளோ எமோஷனல் டைப்பா இருப்பான். உலகம் முழுக்க, சில்க் உடை கூடாது, தேனீக்கள் தேன் எடுப்பது நமக்காக அல்ல அவைகளுக்காக, பால் சுரப்பது கன்னுக்குட்டிக்கு, நமக்கில்லை ன்னு, இதையெல்லாம் புறக்கணிக்கும் நிறைய பேர் உலகம் முழுக்க Veganism சித்தாந்தத்துக்கு மாறி இருப்பவர்கள் உண்டு, ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் இருக்கு, அதற்கான நியாய தர்மம் அவர்களோடது, அங்க போய் நாம் நம் அறிவாளி தனத்தை காட்டி defend பண்ணுறது அர்த்தமே இல்லை. ஆனா, அறிவு, யதார்த்தம், நிதர்சனம், நியதி என்பது constant , அது மாறவே மாறாது, நம் எமோஷனலை வைத்து நம்மை நாம் வடிவமைத்து கொள்ளலாமே ஒழிய, அதே எமோஷனலை வைத்து உலகத்தை கட்டமைக்க கூடாது, இங்க தான் பிரச்சனை வருது.
டிஸ்கவரி சேனலில் ஒரு புலி மானை துரத்துகிறது, வளைந்து வளைந்து ஓடும் மானை பிடிக்க நீண்ட நேரம் ஓடுகிறது, ஒரு கட்டத்தில் பாய்ந்து அந்த மானின் முதுகை பிடித்து கழுத்தை கவ்வும் போது, அங்கே நமக்கு பதறுகிறது, மான்கள் புலிகளிடமும், சிங்கத்திடமும் சிக்குவதை நாம் விரும்புவதே கிடையாது. மான் மீது நமக்கு எமோஷனல் இருந்தாலும் அடிப்படையில் எவ்ளோ சாடிஸ்ட் தனம் நம்ம கிட்ட இருக்குன்னு யோசிச்சி இருக்கீங்களா? புலியோ, சிங்கமோ அதன் உணவை தேடி ஓடுகிறது, அதற்கு குட்டிகள் இருக்கிறது, அதுவும் வாழ வேண்டும், அது அதனோட உணவு, அதன் உணவை அது தேடிக்கொள்வதை கூட நமக்கு பிடிக்கவில்லை, இது சாடிஸ்ட் தனம் தானே? நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் போனாலும் அப்படி தான்.
நாம் நம் வசதிக்காக சில பிராணிகளை domestic ஆக்கி பக்கத்திலேயே வைத்திருக்கிறோம், காலம் கடந்து விட்டது, இனி ஆடு மாடுகள், கோழிகள், நாய்கள் காடுகளில் வாசிக்க தகுதியற்றவை, அவைகளால் அங்கே ஜீவிக்க முடியாது, அது நம்மோடவே வாழ்ந்து பழகி விட்டது. ஆடு மாடுகள் எல்லாம் புலி, சிங்கம், நரியின் உணவுகள் மனிதன் தாவரத்தை உண்டு வாழலாம், அதனால் அதை கொல்லாமல் இருக்கலாம் என்பது உலகத்தின் ஆகச்சிறந்த முட்டாள் தனமான வாதம்.
இரண்டு விஷயம் இருக்கிறது, ஒரு தனிப்பட்ட உயிர் வாழ வேண்டுமா? அல்லது ஒரு இனமே வாழ வேண்டுமா என்பது. மனிதன் எமோஷனலாக build ஆனதால் ஒவ்வொரு தனி உயிரையும் தனியாக பார்க்கிறான், ஆனால் இயற்கை விதிக்கு உட்பட்டு வாழும் உலக நடைமுறை அப்படியானதல்ல. ஒரு இனம் கடத்தப்பட வேண்டும், நாம் domestic ஆக்கி வைத்திருக்கும் பிராணிகளை நாம் உண்ணாமல் விட்டால், அதுவே அதன் இனமே அழிவதற்கான முதற்படி. அழிவு இல்லாமல் பெருத்துக்கொண்டே போகும் பிராணிகளால் அந்த மொத்த இனமே அழிந்து விடும், விரிவாக சொல்லவேண்டுமானால்,
புல், பூண்டு, செடி, கொடிகள் தான் மொத்த பூமிக்கும் ஆதாரம், இங்கே ஆடு, மாடு, பன்றிகள் உணவுக்காக கொல்லப்படாமல் போனால், அதன் எண்னிக்கை பல மடங்கு பெருக்கும், அதற்கான தாவர தீனி பஞ்சம் வரும், மனிதனும் நீண்ட காலத்திற்கு ஜீவகாருண்யத்தை வைத்து சோறு போட்டு கொண்டு இருக்க மாட்டான், அவனுக்கு எந்த வகையிலுமே பயன் படாத பிராணியை அவன் ஏன் வளர்க்க போகிறான்? இது வெறும் கற்பனை தியரி அல்ல, நடைமுறையிலேயே நடந்து கொண்டிருக்கும் சம்பவம், ஒரு வாரத்திற்கு முன்னே ஆந்திராவில் பாதுகாக்கப்பட வேண்டி வளர்க்கப்பட்ட பசுமாடுகள் உணவு பற்றாக்குறையாலும், சிறிய இடத்தில் அதிகமான மாடுகளை கட்டியதாலும் நோய் தொற்று பரவி மாடுகள் இறந்திருக்கிறது. வளர்க்க முடியாத பிராணிகளை எண்களிட கொடுங்கள் நாங்க வளர்க்கிறோம் என்று கேட்டு வாங்கி கொண்டு போகும் பீட்டா மாதிரி அமைப்புகள் நடத்தும் பண்ணைகளில் கூட உணவு பற்றாக்குறையால் ஏராளமான பிராணிகள் செத்து மடிந்திருக்கிறது. கோவளம், சோழிங்க நல்லூர் பகுதியில் மாடுகள் மேய்ச்சலுக்கு இடமில்லாமல், சாலையில் நின்று கொண்டிருக்கிறது, மாடுகள் பேப்பர், பிளாஸ்டிக் தாள்களை தின்ன ஆரம்பித்து விட்டது. இந்த கால்நடைகளை அடித்து தின்னும் அளவு வனவிலங்குகளும் குறைந்து வருகிறது, காடுகளும் சுருங்கி வருகிறது.
தாவரங்களை வெட்டினால், அதன் அழுகுரல் நமக்கு கேட்கவில்லை, அதன் ரத்தம் சிகப்பு நிறமில்லை, ஆக அதற்கு உணர்வுகள் இல்லை என்று நம்மை நாமே சமாதானப்படுத்தி தான் தாவரம் மனிதனனுக்காகவே படைக்கப்பட்டது என்று நம்புகிறோம்.
பைபிளில் ஒரு வசனம் உண்டு,
"நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன் -
ஆதியாகமம் 9 : 3
இதுவே ஒரு ஆணவமான வசனம் தான். செடி கொடி, தழைகள், மிருகங்கள் என்று எதுவுமே நமக்காக படைக்கப்படவில்லை, எல்லோருக்குக்காகவும் உருவாகி இருக்கிறது, அல்லது உருவானதை ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கிறோம், ஒவ்வொரும் உயிரும் ஒன்றை சார்ந்து எங்கோ ஒரு தொடர்பு புள்ளியில் ஒன்றிணைகிறது, உலகத்தின் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்போடு, எல்லோருக்குமானதாக சார்பு நிலையோடு இருக்கிறதே ஒழிய, மனிதனால் எழுதப்பட்ட பைபிள் வசனம் போல, "உங்களுக்காகவே படைத்தேன்" என்பதே ஆணவத்தோணி தான்.
ஆக, மனிதன் எவ்வளவு எமோஷனலாக யோசித்தாலும், "அது நமக்கு தேவைப்படுகிறது, அதை சார்ந்து நாம் இருக்கிறோம், நம்மை சார்ந்து அது இருக்கிறது, அதை சார்ந்து என் இனம் இருக்க போகிறது, அதன் இனம் என் இனத்தை சார்ந்து இருக்க போகிறது" அவ்வளவு தான்.

கருத்துகள் இல்லை: