வெள்ளி, 28 ஜூலை, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக + நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி !

பீகார் முதல்வராக நேற்று ஜூலை 27ஆம் தேதி காலை பதவியேற்றுக் கொண்ட நிதீஷ் குமார், பீகார் சட்டசபையில் இன்று ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியுடன் முதலமைச்சராக அவர் பதவியில் நீடிப்பார்.
பீகாரில் நிதிஷ்குமாரின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது,நடைபெற்ற ஊழல் தொடர்பாக கடந்த ஜூலை 7ஆம் தேதி சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது . அதைத்தொடர்ந்து, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் நிதீஷ் குமார் கால அவகாசம் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கூட்டணியில் விரிசல் தோன்றியது. இதனால் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஜூலை 26ஆம் தேதி மாலை ஆலோசனை நடத்திய பின்னர், கவர்னர் மாளிகைக்குச் சென்று, கவர்னர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ் குமாருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்ததை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பாட்னா நகரில் நடைபெற்ற பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பாஜக-வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக, பீகார் கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி, 132 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு பட்டியலை நிதிஷ் குமார் அளித்ததையடுத்து, நேற்று ஜூலை 27ஆம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் கேசரி நாத் திரிபாதி, நிதீஷ் குமாருக்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றார். அதன் பின்னர், சட்டசபையில் பெரும்பான்மையை 2 நாளில் நிரூபிக்க வேண்டும் என்று நிதீஷ் குமாருக்கு, கவர்னர் கெடு விதித்தார்.
அதையொட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று ஜூலை 28ஆம் தேதி பீகார் சட்டசபையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக பீகார் அமைச்சரவை ஒருங்கிணைப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரஜேஷ் மெரோத்ரா தெரிவித்தார். அதன்படி, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற நிதீஷ் குமார் அரசுக்கு 122 வாக்குகள் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்.
பீகார் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 243. இதில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு - 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம்- 71, பாஜக கூட்டணி - 58 சுயேட்சைகள் - 4, சிபிஐ(எம்.எல்.) - 4. பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை: 122. தற்போதைய நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 129 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆகையால், அவர்களது வாக்குகள் நிதீஷ் குமாருக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதேபோல் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏக்களில் ஒரு சிலர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருந்ததையடுத்து, மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ள பீகார் சட்டசபையில் நிதீஷ் குமாருக்கு 132 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு கிடைக்கும் என்று தெரிந்தது.
அதைத்தொடர்ந்து, பீகாரின் சிறப்பு ஒரு நாள் சட்டசபை கூட்டம் இன்று காலையில் கூடியது. முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி உள்பட அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பிறப்பித்த உத்தரவையடுத்து, எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டனர். அப்போது, அவையில் ஏற்பட்ட கடும் அமளிகளுக்கு இடையே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதீஷ் குமாருக்கு ஆதரவாக 131 எம்.எல்.ஏ.-க்களும்., எதிராக 108 எம்.எல்.ஏ.-க்களும் வாக்களித்ததைத் தொடர்ந்து, நிதீஷ் குமார் பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக நீடிப்பார்.
நேற்று வரை ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் காங்கிரஸ் காட்சிகளுடன் கூட்டணி அமைத்த நிதீஷ் குமார் இனி, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: