புதன், 26 ஜூலை, 2017

அறிவித்தபடி மனித சங்கிலி! திமுக அறிவிப்பு !

அறிவித்தபடி மனித சங்கிலி!
மின்னம்பலம் : திமுக சார்பில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த மனித சங்கிலி போராட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது இதனால் அறிவித்தபடி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஜூலை 27-ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சத்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படப் பதிலில் திமுகவின் மனித சங்கிலி போராட்டத்திற்குக் காவல்துறையினர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல், கறுப்பு பட்டை அணிந்து அமைதியான முறையில் நடத்தும் போராட்டத்திற்கு எவ்வாறு தடை விதிக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழக அரசு சார்பிலோ, காவல் துறையினர் தரப்பிலோ இந்தப் போராட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்பதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் திமுக மனிதசங்கிலிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஜூலை 26-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அறிவித்தபடி மனித சங்கிலி போராட்டம் (ஜூலை 27-ஆம் தேதி) நாளை நடைபெறும். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்கிறார்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: