செவ்வாய், 25 ஜூலை, 2017

தரங்கம்பாடி ... டென்மார்க்கின் ஒரே ஒரு இந்திய காலனி !

muruganantham.ramasamy.: தரங்கம்பாடி செல்ல வேண்டும் என்பது நீண்டகாலமாய் மனதில் ஓடிய திட்டம்.. காரைக்கால் பயணத்தில் சாத்தியமானது.. உலகின் மிகப்பழமையான பேரரசு எனச்சொல்லிக்கொள்ளும் டென்மார்க்கின் ஒரே இந்திய காலனி தரங்கை.. இலங்கையில் ஒரு குடியேற்றத்தை அமைக்க அனுமதி கோரிக்கிடைக்காமல் தஞ்சை மராட்டிய மன்னரின் அனுமதி பெற்று டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி இங்கு அமைக்கப்பெற்றது.. 1848ல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாடிற்கு வரும்வரை டென்மார்க் காலனியாக இருந்தது. அவர்களே புகழ்பெற்ற டேனிஷ்கோட்டையை இங்கு அமைத்தனர்..
இந்தியாவின் முதல் சீர்திருத்த கிருத்துவ திருச்சபையான லுத்ரன் திருச்சபை இங்கு அமைந்தது. தற்போது தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை என அழைக்கப்படும்
இதன் தலைமையிடம் தரங்கம்பாடிதான். இதன் மத பேதகராக வந்த
ஜெர்மானியரான பார்த்தலோமியா ஷீகன் பால்க் தமிழ்ச்சமூகத்தினால் நன்றியுடன் நினைவு கொள்ளப்பட வேண்டியவர். இவரே தமிழின் முதல் அச்சு நூலான தமிழ் விவிலியத்தை தரங்கம்பாடியில் அச்சிட்டார்.. அது மட்டுமின்றி இந்தியாவிற்கு வந்த முதல் சீர்திருத்த மத போதகர். தமிழில் மறைவிளக்கம் செய்த முதல் அருட்பணியாளர், இந்திய கடவுள்கள் பற்றி ஜெர்மன் மொழியில் முதலில் எழுதியவர், இந்திய மொழி ஒன்றில் விவிலியத்தை முதன்முதலில் மொழி பெயர்த்தவர் என பல "முதல்" பெருமைகளை கொண்டவர். 1718ல் இவர் கட்டி முடித்த தேவாலயத்தில் 1719ல் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.. அதுவரையான காலத்தில் அவர் ஒரு மதபோதகருக்கான பணிகளுக்கப்பால் இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழிக்கு அச்சடையாளத்தை அளித்தது உள்ளிட்ட பல அரும்பணிகளை செய்துவிட்டிருந்தார்.
அவர் வாழ்ந்த வீடு ஜெர்மன் உதவியுடன் தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ஒரு சிறிய அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.. அவர் முதலில் அச்சிட்ட அச்சியந்திரம் ஜெர்மானிய அருங்காட்சியகம் ஒன்றிலும், அவர் அச்சிட்ட தமிழ்பைபிள் டென்மார்க் கோபன் ஹேகன் அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்படுகிறது.. அதற்கு பதிலாக சேலத்தில் இருந்து பழைய அச்சியந்திரம் ஒன்றை வாங்கி இங்கு வைத்திருக்கிறார்கள். ஒரு மொழியின் வரலாற்று திறப்பை தந்த இவற்றை தமிழகத்திற்கு பெற்று இங்கு பாதுகாக்க துப்பில்லாமல் வாய்ச்சவடால் மட்டும் வான்முட்ட எழுப்பும் சமூகமாகிவிட்ட நமக்கு வரலாறு என்பது வாட்ஸ்அப்பில் படிப்பதாக ஆனதில் வியப்பேயில்லை..
என் தாய்மொழியின் வழியே உலகத்தை கற்க தலைப்பட்ட வாசகனாக அருட்திரு. ஷீகன்பால்க்கின் நல்லடக்கத்தலத்தில் நின்ற கணம் வந்த சிலிர்ப்பு அந்த பேற்றத்தக்க என் மொழிகாத்த முன்னோடிக்கான உண்மையான நினைவஞ்சலி என்பதில் எனக்கு ஐயமேயில்லை..

கருத்துகள் இல்லை: