திங்கள், 24 ஜூலை, 2017

லாலு மகள் சொத்துக்கள் பறிமுதல்!

மின்னம்பலம்  :ஊழல் குற்றச்சாட்டு காரணமாக லாலு பிரசாத் மகள் மிசாபாரதியின் சொத்துக்களை முடக்கி கையகப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
லாலு மகள் சொத்துக்கள் பறிமுதல்!ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி. இவர் அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற எம்.பி.யாக இருந்து வருகிறார். மிசா பாரதியும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிசாபாரதி ரூ.8000 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் மோசடி செய்து இருப்பது உறுதியானது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாலு பிரசாத் யாதவ் வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனையைத் தொடர்ந்து அவரது மகள் மிசாபாரதி வீட்டில் ஜூலை மாதம் 8 ஆம் தேதி வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அதேபோல், 11 ஆம் தேதி லாலு மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கு தொடர்பாக மிசா பாரதி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக புதுடெல்லியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவினர் ஜூலை மாதம் சனிக்கிழமை, 8 ஆம் தேதி சோதனை நடத்தினர். இதைதொடர்ந்து, லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ்குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது. இதையடுத்து பல கட்ட விசாரணைகள் நடந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் மிசாபாரதி மீதும், அவர் கணவர் மீதும் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது.
மிசாபாரதி மீது குற்றச்சாட்டுகள் உறுதியாகி வருவதால் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மிசாபாரதி மற்றும் அவர் கணவர் பெயரில் உள்ள சொத்துகளை முடக்கி கையகப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இது லாலு பிரசாத் யாதவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மகன் தேஜஸ்வியின் துணை முதல்வர் பதவியை காப்பாற்ற லாலு போராடியபடி உள்ளார். இதற்கிடையே மகளின் சொத்துக்கள் கை நழுவுவது அவருக்கு சோதனையையும் வேதனையையும் கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: