வியாழன், 27 ஜூலை, 2017

கோவையில் ஸ்டாலின் கைது!

கோவையில் ஸ்டாலின் கைது!
மின்னம்பலம் :சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட கட்சராயன் ஏரியை பார்வையிட சென்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோவையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியிலுள்ள, கொங்கணாபுரம் கட்சராயன் ஏரியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட செல்வதாக நேற்று அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், 'திமுகவினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரிய கட்சராயன் ஏரியில் நுழைந்த அதிமுகவினர், அங்கு சீரமைக்கப்பட்ட கரைகளை உடைத்து சட்ட விரோதமாக மண் அள்ளி சென்றுள்ளனர். மேலும் நான் திமுக-வினர் தூர்வாரும் ஏரிகளை பார்வையிட்டு வருகிறேன். அதன்படி கட்சராயன் ஏரியை நாளை(இன்று) பார்வையிடுவேன்'என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், இன்று ஜூலை 27 ஆம் தேதி கோவையிலிருந்து கார் மூலம் கட்சராயன் ஏரியை பார்வையிடச் சென்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலினை கோவை கனியூர் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஏரியை பார்வையிடுவதற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான திமுகவினர் குவிந்தனர். மேலும் போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த சேலம் எஸ்.பி.ராஜன்,' சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,' திமுக சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி சேலத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் நான் கலந்துகொள்ள இருந்தேன்.எங்களுடைய மனித சங்கிலி போராட்டம் வெற்றிபெறக் கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுகிறது. பொதுமக்கள் பாராட்டும் வகையில் கட்சராயன் ஏரியை திமுக-வினர் தூர்வாரி முடித்துள்ளனர். முதலமைச்சர் தொகுதியில் திமுக தூர்வாரிய ஏரியின் கரையை உடைத்து அதிமுகவினர் மண் அள்ளி வருகின்றனர். ஏரியை பார்வையிட தடை செய்து ஆணை ஏதும் அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே தடை ஆணையை வழங்காவிட்டால், தடை மீறி அங்கு செல்வேன். திமுக போராட்டம் நடத்தும் என்பதால் தான் நீட் குறித்து பிரதமரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சந்தித்தனர்' என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தடையை மீறி கொங்கணாபுரம் கட்சராயன் ஏரியை பார்வையிட சென்றதாக சேலம் செல்லும் வழியில் காரிலிருந்து இறக்கப்பட்ட ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர் கோவையிலுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு ஏராளமான திமுகவினர் குவிந்துள்ளனர். ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொங்கணாபுரம், ஈரோடு, அந்தியூர், கோபி செட்டிப்பாளையம் பகுதிகளில் ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில்,'மனித சங்கிலி போராட்டம் நடைபெறக்கூடாது என்று அதிமுக அரசு, திமுகவை மிரட்டுகிறது. காவல்துறை மூலம் திமுக மாவட்டச் செயலாளர்களை அரசு மிரட்டுகிறது. ஆனால் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மத்தியில் ஆளும் பாஜக அரசை திருப்திப்படுத்தவே ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.போலீசாரால் காரிலிருந்து இறக்கி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை: