புதன், 30 நவம்பர், 2016

பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்


வங்கியில் பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் !!
கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது, மோடி அரசு !
கார்ப்பரேட் முதலாளிக்காக கொள்ளை போகுது, நமது பணம் !
;அன்புடையீர் வணக்கம், ;இந்தியாவில் 86 சதவீத பணப்புழக்கமாக இருந்தரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என்ற மோடிஅரசின்திடீர் அறிவிப்பு சுனாமியைவிட பயங்கரமான விளைவுகளை நாடு முழுவதும் ஏற்படுத்திவருகிறது. ரொக்கப்பண தட்டுப்பாட்டால் இலட்சக்கணக்கான சிறுதொழில்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கோடிக்கணக்கான மக்களும், தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் சாகும் நிலை ஏற்படும் என அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். முதலீட்டுக்கு, அதிக வட்டி, இரட்டிப்பு பலன். ஒருமுறை பணம் கட்டினால் மாதா மாதம் பணம் வீட்டுக்கு வரும், நகை பாலிசு, இப்படி பல பல நூதன கொள்ளைகள் தொடர்கின்றன. குடும்ப பெண்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் ஏமாந்துகொண்டுதான் வருகிறார்கள். இவை போன்றதுதான், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும்.

கருப்புப் பணம், கள்ளப்பணம், லஞ்ச ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய நூதனக்கொள்ளை நடக்கிறது. தொழில்கள் செய்யவோ, அவசியப் பொருட்கள் வாங்கவோ வழியின்றிகோடிக்கணக்கான மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். உழைத்து சேமித்து வங்கியில் போட்ட நமது பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகளும், தடைகளும் ஏற்படுத்துவது உலகில் எந்த நாட்டிலும் நிகழாத ஒன்று. மத்திய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் நாளும் அறிவித்து வரும் புதிய புதிய ஆணைகளும், விளக்கங்களும், வாக்குறுதிகளும் அறுத்த காயத்தில் மிளகாய்த்தூள் தூவியதை போல எரிச்சலைத்தான் தூண்டுகிறது. கருப்புப் பண ஆசாமிகள்தாம் பயப்பட வேண்டும் முறையாக சம்பாதித்தவர்கள் கணக்கைக் காட்டி வங்கிகளில் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் வங்கிகளில், ஏ.டி.எம்.களில் பணம் இல்லையெனத் துரத்துகிறார்கள். 10, 12 மணிநேரம் கால்கடுக்க மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
தொழில் பாதித்த சிறு வணிகர்கள், கல்யாணம்நின்று போன பெண்கள். கட்டணம் கட்ட முடியாத மாணவர்கள், கூட்டுறவு வங்கியில் பணம்பெற முடியாத விவசாயிகள் என தினந்தோறும் பலர் சாகிறார்கள். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 90 சதவீதம் பேர் அரசின் திட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்று ஆளுங்கட்சி, ஆட்சியைபிடிக்க தேர்தலின்போது புளுகியதைப் போலவே இப்போதும் செய்கிறது. சினிமாவுக்காக பல மணிநேரம் காத்து கிடக்கும் மக்கள், நாட்டுக்காகக் கொஞ்ச நேரம், சில நாட்கள் வங்கிகளில் சிரமப்படக் கூடாதா? எல்லையில் தேசத்துக்காக இராணுவ வீரர்கள் பனிமலையில் நிற்கவில்லையா? என்று வக்கிரமாகக் கேட்கிறார்கள். அரசாங்கம் சொல்லுவதை எல்லாம் ஆதரிப்பதுதான்புத்திசாலித்தனம், தேசபக்தி என்று பல படித்த முட்டாள்கள் நம்புகிறார்கள்.
இவை எல்லாம் எதற்காக? உண்மையில் கருப்புப் பணம், கள்ளப்பணம் இலஞ்ச ஊழலை ஒழிக்கவா? ஆட்சிக்கு வந்த 100 நாளில் 80 லட்சம் கோடி வெளிநாட்டு கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கணக்கில் போடுகிறேன் என மோடி வாக்குறுதி அளித்தார். ஏன் செய்யவில்லை?
இந்தியாவில் யாரிடம் கருப்புப் பணம் உள்ளது என்ற விபரம் வருமானவரித்துறை, சி.பி.ஐ வருவாய் புலனாய்வுத்துறை, நிதி அமைச்சகம் ஆகிய துறைகளுக்கு நன்கு தெரியும். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கருப்பு பணமாக பதுக்கியவர்களின் பெயரைக் கூட மோடி சொல்ல மறுக்கிறார். பல லட்சம் கோடிகளை வாராக் கடனாக்கிய கிரிமினல் முதலாளிகளின் பெயரையும் சொல்ல மறுக்கிறார். இவரா கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறார்?
பன்னிரெண்டு லட்சம் கோடி ரூபாய் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் வராக்கடனால் வங்கிகள் திவாலாக வேண்டிய அபாயத்தை, முட்டுக்கொடுக்கவே கோடிக்கணக்கான மக்களுடைய சேமிப்புப்பணத்தை, சம்பளப்பணத்தை பலவந்தமாக வழிப்பறி செய்கிறது மோடி அரசு.
ஊரில் ஒரு குற்றம் நடந்தால் போலீசார் குற்றத்தை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது தெருவில் உள்ள மக்களையெல்லாம் ஸ்டேசனில் வைத்து அடித்துவிசாரிக்கவேண்டுமா? கருப்புப் பணமுதலைகளை பிடிக்காமல் குளத்துநீர் முழுவதையும் இறைத்த கதைதான் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் உத்தரவு.
கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யாமலேயே செய்ததாகவும், உற்பத்தியை குறைத்து காண்பித்தும் மின்னணு பரிவர்த்தனையில்தான் சுமார் 56 இலட்சம் கோடி கருப்புப் பணம் இந்த ஓராண்டில் மட்டும் உருவாகி உள்ளது. இதை ஒழிக்க என்ன நடவடிக்கை?
ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, தனியார் கல்வி நிறுவனங்கள், ஆன்மீகத்தை பரப்பும்மடங்கள் ஆகியவற்றில் பல லட்சம் கோடிகள் கருப்புப் பணமாகவும், ஊழல் பணமாகவும் உருவானதில், தலையாரிமுதல் தலைமை செயலர் வரை, வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் பங்காளிகள். இந்நிலையில் யாரை வைத்து, யாரிடம் இருந்து கருப்புப் பணத்தை, ஊழல் பணத்தை எப்படி மீட்க போகிறது மோடி அரசு?
பெரும்பான்மை மக்களின் ரொக்கப் பொருளாதாரத்தை வங்கியின் மூலமாகத்தான் கண்டிப்பாக வரவு செலவு செய்ய வேண்டும் என மோடி உத்தரவு போடுவது அனைவருக்கும் வரிவிதிப்பை கட்டாயமாக்கவும், சில்லறை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ், வால்மார்ட், பிக் பஜார் போன்ற பெரும் வணிகத்தை கொழிக்க வைக்கவும், மேலும் வங்கியின் வருமானத்தை பெருக்கி வங்கி முதலாளிகளை வளர்க்கவும், மக்கள் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கி வராக்கடனாக தள்ளுபடி செய்யவுமே, மக்கள் மீதான மோடியின் இந்த அதிரடித் தாக்குதல்.
நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை?
வங்கியில் பணத்தை எடுப்போம்!
வங்கிக் கணக்கை முடிப்போம்!
நமது சேமிப்பு பணத்தை கார்ப்பரேட்டுகள்
கொள்ளையடிக்க அனுமதியோம் !
Page-1-Full
Page-2-Full_________________
கருப்புப் பணக்காரணுக்கு கடன் தள்ளுபடி ! வரிச்சலுகை !
ஏமாந்த நமக்கேன் தண்டனை ?
மோடி அரசை தெருவில் நிறுத்தி கேள்வி கேட்போம் !
A3-copy(1)
தகவல் :
மக்கள் அதிகாரம்,தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை: