சனி, 3 டிசம்பர், 2016

திருமதி ரஞ்சிதம் நல்லகண்ணு மறைவு.

தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் துணைவியார் திருமதி ரஞ்சிதம் நல்லகண்ணு மறைவு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் மனைவி திருமதி.ரஞ்சிதம் அம்மையார் (வயது 82) இன்று (01.12.2016) காலை 10.30 மணி அளவில் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீவைகுண்டம் அன்னாசாமி தேவர் சந்தோசியம்மாள் தம்பதிகளின் மகளான ரஞ்சிதம் அம்மையாருடன் பிறந்த சகோதரர் 3 பேரும், சகோதரிகள் 6 பேரும் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை தேவர் சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதாலும், அடிதட்டு மக்களுக்கு ஆதரவாக நின்றதாலும் சில சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர். சமூக நல்லிணக்கத்திலும், மனிதாபிமானமாக செயல்படுதிலும் ஆர்வமுள்ள குடும்பத்தை சார்ந்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியரான தோழர் நல்லகண்ணு ரஞ்சிதம் அம்மையாரின் திருமணம் காலச்சென்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான தோழர் ப.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இவர்களுக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர். காசிபாரதி ஆசிரியராகவும், ஆண்டாள் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆசிரியர் பணியில் சேர்ந்த ரஞ்சிதம் அம்மையார் படிப்படியாக உயர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மணல்விளை ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
தோழர் நல்லகண்ணு வின் பொதுவாழ்கை வெற்றிகரமாக அமையவும், மக்களின் நன்மதிப்பை பெறவும் இவரது ஆதரவும், ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.

கணவரின் பொதுவாழ்க்கையையும்;, குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிறப்பாக பராமரித்து வந்த ரஞ்சிதம் அம்மையார் கல்வி பணியில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வந்தார்.
அன்னாரின் உடலுக்கு நாளை (02.12.2016) மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் இறுதி காரியங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், அனைத்து தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 
R Mutharasan முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: