சனி, 3 டிசம்பர், 2016

ஒரு பாசிச கோமாளியால்.. புழக்கத்திற்கு அதிகமாக பணம் வங்கிகளில் ..விபரீத நிலையில் இந்திய பொருளாதாரம்

மாதவராஜ்மாதவராஜ்: வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம்.
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பு 4.70 லட்சம் கோடி.
ஆக வெளியே இருந்தது 10.74 லட்சம் கோடி. இதில்தான் பெரும்பகுதி கருப்புப்பணம் இருக்கிறது என்று மோடியும், மோடியின் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி கருப்புப்பணம் என கணக்கிடப்பட்டது

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த 3 லட்சம் கோடியில் ஒரு லட்சம் கோடி வங்கியின் கணக்குகளுக்குள் வரும். அது குறித்து ஆராய வேண்டும். மீதி இரண்டு லட்சம் கோடியை புதைத்து விடுவார்கள், எரித்து விடுவார்கள், எதோ செய்து விடுவார்கள், வங்கிக்குள் வராது என்று உறுதியாக நம்பினார்கள். அந்த இரண்டு லட்சம் கோடியை மீட்டதாக அறிவித்து 1 கோடி குடும்பங்களுக்கு தலா இருபதாயிரமாகவோ அல்லது 2 கோடி குடும்பங்களுக்கு தலா பத்தாயிரமாகவோ கொடுத்து, பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்ததாய் ஒரு சினிமா காட்டலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது.
ஆனால் மக்கள் இந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று வரை, வங்கிகளுக்குள் 500 , 1000 ருபாய் நோட்டுகளின் மூலமாக வந்தது 8.5 லட்சம் கோடி. அதாவது வரவேண்டியிருந்த 10.74 லட்சம் கோடியில் இன்னும் 2.24 லட்சம் கோடிதான் வர வேண்டும். இன்னும் முழுசாக 28 நாட்கள் இருக்கின்றன. அதுவும் வந்து விடும். அதற்கு மேலும் வந்து விடும்.
கணக்கிடப்பட்டு இருக்கும் புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம் வந்தால் என்ன அர்த்தம். கண்டுபிடிக்க முடியாதபடி கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. அது அரசுக்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் மோடியின் திட்டம் அம்பேலாகிறது. எனவே தான், ஜந்தன் கணக்குகளில் பணம் கட்டப்படுவதற்கும் எடுப்பதற்கும் இப்போது கெடுபிடிகள் விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பே exchange கிடையாது என்று சொல்லப்படுகிறது. இன்று முதல் 500 ருபாய் நோட்டுகள் பெட்ரோல் பம்ப்பிலும் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. மோடியின் திட்டத்தை காப்பாற்ற ரிசர்வ் வங்கி நாளெல்லாம் மூளையைக் கசக்கிக் கொண்டு இருக்கிறது. கருப்புப்பணம் மட்டும் நோக்கமல்ல, cashless economy தான் எதிர்காலம் என போகாத ஊருக்கு வழி காட்டி திசை திருப்பும் நாடகமும் அரங்கேறுகிறது.
ஒரு பாசிச கோமாளியின் முட்டாள்தனத்தால் மொத்த நாட்டிற்கும் பைத்தியம் பிடித்ததும், மக்களை பிச்சைக்காரர்களை போல ரோட்டில் நிறுத்தியதும் தான் மிச்சம். இதனால் ஏற்படும் பாதிப்புகளை யோசித்தால் அது பெரும் பயங்கரமாய் இருக்கிறது.
மாதவராஜ், எழுத்தாளர்;  தொழிற்சங்க செயல்பாட்டாளர். minnambalam.com

கருத்துகள் இல்லை: